ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்: எம்.எஸ்.எம்.இ., அமைச்சர்
ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்: எம்.எஸ்.எம்.இ., அமைச்சர்
UPDATED : அக் 01, 2025 10:57 PM
ADDED : அக் 01, 2025 10:59 PM

மதுரை:
'ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை இந்தியாவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது'' என மதுரையில் நடந்த இன்குபேட்டர் தொழில் மைய துவக்கவிழாவில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை (எம்.எஸ்.எம்.இ.,) அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.
அவர் பேசியதாவது:
உலகளவில் தொழில்நுட்பம் வாய்ந்த 20 இடங்களின் பட்டியலில் தமிழகமும் வரவேண்டும் என்பதற்காக தான் அக்., 9, 10 ல் கோவை கொடீட்சியா வளாகத்தில் உலகப் புத்தொழில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் உலகத்தரத்திற்கு தமிழகம் செல்லும். 39 நாடுகளில் இருந்து 264 பங்கேற்பாளர்களுடன் 30ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழில்முனைவோர் இம்மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். மத்திய அரசின் 10 துறைகள், மாநிலங்களின் அரசு துறைகளுடன் ஆயிரம் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.
கண்டு கொள்ளாத அ.தி.மு.க., அ.தி.மு.க., ஆட்சியில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை. முதல்வர் ஸ்டாலின் தனித்துறையை உருவாக்கியுள்ளார். இந்த நான்கரை ஆண்டுகளில் 212 ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் ரூ.79.40 கோடியை அரசு முதலீடு செய்துள்ளது. எஸ்.சி., எஸ்.டி.,யினருக்கான ஆதார நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் 43 நிறுவனங்களுக்கு ரூ.60.80 கோடி வழங்கப்பட்டுள்ளது. 68 நிறுவனங்களில் ரூ.554.49 கோடி மதிப்பில் வெளி முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீடுகள் பெறப்பட்டுள்ளன. 2021 வரையான அ.தி.மு.க., ஆட்சியில் ஸ்டார்ட் அப் தரவரிசை பட்டியலில் கடைசி இடத்தில் தமிழகம் இருந்தது.
தற்போது 12 ஆயிரத்து 172 நிறுவனங்களுடன் முதலிடத்தில் உள்ளது. இதில் 6063 நிறுவனங்களில் பெண்கள் தலைமையேற்று நடத்துவது பெருமையான விஷயம். அ.தி.மு.க.,வின் பத்தாண்டு ஆட்சியில் எம்.எம்.எஸ்.இ., துறையின் கீழ் 52 ஆயிரம் தொழில்முனைவோர்கள் தான் உருவாக்கப்பட்டனர். நான்கரை ஆண்டுகளில் ரூ.5490 கோடி அளவிற்கு வங்கிக்கடன் பெற்று தந்து அதற்கு ரூ.2133 கோடி மானியம் தந்து 66ஆயிரம் பேரை தொழில்முனைவோராக உருவாக்கியுள்ளோம்.
குறு, சிறு நிறுவனங்கள் தொழில் துவங்குவதற்கேற்ப தனிநபர்கள் மொத்தமாக நிலம் தர முன்வந்தால் சிட்கோ தொழிற்பேட்டை அமைத்து ரூ.15 கோடி மதிப்பில் அடிப்படை வசதிகள் அந்த இடத்தில் செய்து தரப்படும். முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்ற பின் 2000 காலிமனைகளில் சிறுதொழில்கள் தொடங்க ஏற்பாடு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.