நீட் தேர்வில் முதலிடம் தமிழக மாணவருக்கு டில்லி எய்ம்ஸில் சீட்
நீட் தேர்வில் முதலிடம் தமிழக மாணவருக்கு டில்லி எய்ம்ஸில் சீட்
UPDATED : ஆக 26, 2024 12:00 AM
ADDED : ஆக 26, 2024 06:38 PM

சென்னை:
நீட் நுழைவுத் தேர்வில், 720 என, முழு மதிப்பெண் பெற்ற, தமிழகத்தை சேர்ந்த ரஜனீஷ் உட் பட, 17 மாணவர்களுக்கும் டில்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரியில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
நாடு முழுதும், அரசு மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, 15 சதவீத எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., சேர்க்கை இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. இந்த இடங்களுக்கும், எய்ம்ஸ், ஜிப்மர், நிகர்நிலை பல்கலைகள், மத்திய பல்கலைகளில் உள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களுக்கும் சேர்த்து, மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங், ஆன்லைனில் நடத்தப்பட்டது.
அதன்படி, 2024 - 25ம் கல்வியாண்டுக்கான முதற்கட்ட கவுன்சிலிங் முடிவுகள், mcc.nic.in என்ற இணையதளத்தில் நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டன. அதில், 720க்கு 720 என முழு மதிப்பெண் பெற்ற, நாமக்கல் பள்ளியில் படித்த மாணவர் ரஜனீஷ், அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்திருந்தார்.
அவர், டில்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரியில் இடம் தேர்வு செய்து பெற்றுள்ளார். அவருடன், 720 முழு மதிப்பெண் பெற்ற மாணவர்கள், 17 பேரும், டில்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரியை தேர்வு செய்து, ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.