ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம்; 'நிடி ஆயோக்' பாராட்டு
ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம்; 'நிடி ஆயோக்' பாராட்டு
UPDATED : மே 09, 2024 12:00 AM
ADDED : மே 09, 2024 11:15 PM
சென்னை:
ஜவுளி துணிகள், ஆயத்த ஆடைகள், தோல் பொருள்கள் ஏற்றுமதியில், தமிழகம் முதலிடம் வகிக்கிறது.
தி.மு.க., அரசு பொறுப்பேற்று, மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பல்வேறு துறைகளில், தமிழகம் இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளது.
உற்பத்தி பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கான ஆயத்த நிலைகள் குறித்த, மத்திய அரசின் நிடி ஆயோக்நிறுவனம் ஆய்வு செய்து, 80 முதல் 100 சதவீதம் அளவுக்கு ஏற்றுமதி செய்து, தமிழகம் முதலிடம் பெற்றுள்ளதாக பாராட்டி உள்ளது.
இந்தியா முழுதும் நடந்த ஏற்றுமதியில், தமிழகம், 16.30 சதவீத பொருட்களை ஏற்றுமதி செய்து, இரண்டாம் இடம் பெற்றுள்ளது. கர்ப்பிணி பெண்கள் சுகாதாரக் குறியீடுகளில், கர்ப்பிணி பெண்கள் பராமரிப்புடன், மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
தமிழகத்தில், 99 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடக்கின்றன. அனைத்து வசதிகளுடன் குழந்தைகளைபராமரித்து காப்பதில், தமிழகம் முன்னணியில்உள்ளது.
தமிழகம் அதிக அளவில், 50 சிறப்பு பொருளாதார மண்டலங்களை ஏற்படுத்தி, இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. ஜவுளி துணிகள் ஏற்றுமதி, ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, தோல் பொருட்கள் ஏற்றுமதி ஆகியவற்றில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
தமிழகத்தின் எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதி 1.39 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் எட்டு லட்சம்கோடி ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. மத்திய அரசின் ஆய்வு அறிக்கைகள், தமிழகம் பெரும்பாலான முக்கியத் துறைகளில், இந்தியாவில் முதலிடத்தில் உள்ளதை உறுதிப்படுத்துகின்றன.
முதலீடு
முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சென்னை, கோவை, துாத்துக்குடி நகரங்களிலும், மலேஷியா, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடு வழியாக, 9.61 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
இதன் வழியாக, 30 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான ஒப்பந்தங்கள் நடந்துள்ளன. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், 45 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதுவரை 27 தொழிற்சாலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.இவற்றின் வழியே 74,757 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

