ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் எளிய நடைமுறை பின்பற்றப்படுமா?
ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் எளிய நடைமுறை பின்பற்றப்படுமா?
UPDATED : மார் 05, 2026 03:05 PM
ADDED : மார் 05, 2026 03:07 PM
மதுரை:
தமிழகத்தில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் சிறப்பு 'டெட்' தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் எளிய நடைமுறையை பின்பற்ற வேண்டும். எராளமான நிபந்தனைகளால் மனஉளைச்சல் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி தேசிய அளவில் தொடக்கக் கல்வியில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனங்களுக்கு 'டெட்' தேர்ச்சி கட்டாயம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் 2011ல் இத்தேர்வு நடைமுறைக்கு வந்தது.
2011க்கு முன் பணியில் சேர்ந்த (5 ஆண்டுகளில் ஓய்வு பெற உள்ளோர் தவிர) 1.70 லட்சம் ஆசிரியர்கள் 'டெட்' தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் அரசு, ஆசிரியர்கள் சங்கங்கள் சீராய்வு மனுக்கள் அளித்துள்ளன.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு 'டெட்' தேர்வு ஜூலை முதல் வாரத்தில் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பிப்., 17 முதல் விண்ணப்பிக்கலாம் எனவும், கடைசி நாள் ஏப்., 10 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதில் விண்ணப்பிக்கும் போது பல்வேறு நிபந்தனைகளை பின்பற்ற வேண்டியுள்ளது. மாறாக, சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் தடையின்மை சான்று அளித்தால் போதும் என்ற வகையில் எளிய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மதுரையில் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
சிறப்பு 'டெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் 'பணிச்சான்று' சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக ஆசிரியர் விண்ணப்பத்துடன் பணிநியமன உத்தரவு, பணிப் பதிவேடு முதல்பக்க நகல், முதன் முதலின் நியமனம் செய்த பதவியில் பணிவரன்முறை செய்யப்பட்ட உத்தரவு, தற்போது பதவியில் பணிவரன்முறை செய்யப்பட்ட நகல், உரிய கல்விச் சான்றுகள் உள்ளிட்டவை இணைக்க வேண்டியுள்ளது.
இந்த பணிச்சான்றை, இடைநிலை ஆசிரியர்கள் பி.இ.ஓ., வழியாக விண்ணப்பித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலரிடமும், பட்டதாரி ஆசிரியர் சி.இ.ஓ.,விடமும் பெற வேண்டும். இந்த நடைமுறையில் மாற்றம் செய்து பணியாற்றும் பள்ளியின் தலைமையாசிரியரே பணிச்சான்று வழங்கும் வகையில் மாற்றம் செய்யலாம்.
தேவையில்லாத அலைச்சல் தவிர்க்கப்படும். ஆசிரியர்களின் எஸ்.ஆர்., (பணிப்பதிவேடு) தலைமையாசிரியர் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. ஏற்கனவே சிறப்பு 'டெட்' அச்சத்தில் தவிக்கும் ஆசிரியர்கள் அதற்கு விண்ணப்பிக்கும் போதும் மனஉளைச்சலை ஏற்படுத்தும் வகையில் நிபந்தனைகள் வேண்டுமா, என்றனர்.

