பள்ளிக்கு வராத ஆசிரியர்கள்: பாடம் நடத்திய கிராம மக்கள்
பள்ளிக்கு வராத ஆசிரியர்கள்: பாடம் நடத்திய கிராம மக்கள்
UPDATED : டிச 04, 2024 12:00 AM
ADDED : டிச 04, 2024 09:46 AM

நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் -நத்தம் அருகே பரளிபுதுார் அரசு பள்ளியில் பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் அவர்களுக்கு கிராம மக்கள் பாடம் நடத்தினர்.
நத்தம் அருகே உள்ளது பரளிபுதுார் . இங்கு 1-ம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை படிக்கும் 90 மாணவர்கள் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பரளி அரசு பள்ளிக்கு சென்று வந்தனர். இதனால் தங்கள் பகுதிக்கு தொடக்கப் பள்ளி அமைக்க கோரி 2022-ல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். 2023 டிசம்பரில் பரளிபுதுாரில் இரண்டு வகுப்பறை கட்டடங்களுடன் தொடக்க பள்ளி திறக்கப்பட்டது. ஓராண்டாகியும் ஆசிரியர்கள் வரவில்லை.
மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . ஆத்திரமடைந்த கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் நேற்று காலை பள்ளி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி வளாகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தேசியக் கொடியை ஏற்றினர். இதன் பின்னர் மாணவர்களுக்கு கிராம மக்களே பாடம் எடுத்தனர். அங்கு வந்த வட்டார கல்வி அலுவலர் கற்பகம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாவட்ட நிர்வாகத்திடம் பேசி பள்ளிக்கு ஆசிரியர் வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூற போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.