UPDATED : அக் 12, 2024 12:00 AM
ADDED : அக் 12, 2024 11:03 AM
திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றம் பாண்டியன் நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். ஹைடெக் ஆராய் நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றும் இவர் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலராகவும் உள்ளார்.
பல ஆண்டுகளாக பொது சேவைகளில் ஈடுபட்டு வரும் இவர் தனது வருமானத்திலிருந்து ஒரு பகுதியை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக வழங்கி வருகிறார். பள்ளிகளுக்கு டேபிள், சேர்கள், ஏழை மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்குகிறார். வசதியின்றி படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்களை தேடிச் சென்று கல்விக்கு உதவி செய்தும் வருகிறார். ஆண்டுக்கு 100 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கான டெபாசிட் தொகையை முழுவதுமாக செலுத்தி வருகிறார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்குதல், விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை, உபகரணங்களையும் வழங்குகிறார். சிறந்த சமூக சேவைக்கான விருது, பல்வேறு அமைப்புகளிலிருந்து சமூக சேவை, ஆன்மிக செம்மல் விருதுகளை பெற்றுள்ளார்.
அவர் கூறியதாவது:
20 வயது முதல் பொது சேவையில் ஈடுபட துவங்கினேன்.
தந்தை வள்ளிநாயகம் எனக்கு பெரிதும் ஊக்கம் அளித்தார். அவருக்கு பின் என் மனைவி ராஜேஸ்வரி பொது சேவைகளுக்கு பெரிதும் ஊக்கப்படுத்தி வருகிறார்.
தற்போது இரண்டு கல்லுாரி மாணவிகள், சட்டக் கல்லுாரியில் படிக்கும் ஒரு மாணவி, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 படிக்கும் இரண்டு மாணவர்களுக்கு முழு கல்விச்செலவையும் ஏற்றுள்ளேன். திறமைகள் இருந்தும் வசதி இல்லாதவர்களுக்கு உதவி செய்வது ஆத்ம திருப்தியும், பெரும் ஆனந்தத்தையும் கொடுக்கிறது.
இவ்வாறு கூறினார்.
இவரை 98431 16617ல் தொடர்பு கொள்ளலாம்.