டெட் தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு; பாதிப்பில் பொதுப் பிரிவினர்: இதுதான் சமூக நீதியா என கொதிப்பு
டெட் தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு; பாதிப்பில் பொதுப் பிரிவினர்: இதுதான் சமூக நீதியா என கொதிப்பு
UPDATED : ஜன 31, 2026 10:48 AM
ADDED : ஜன 31, 2026 10:49 AM
மதுரை:
ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) இடஒதுக்கீடு பிரிவினருக்கு மட்டும் தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீதம் குறைக்கப்பட்ட நிலையில் பொதுப்பிரிவினர் கண்டுகொள்ளப்படவில்லை. இது தான் சமூக நீதியா என அவர்கள் கொதிப்படைந்துள்ளனர்.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி இடைநிலை, பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற டெட் தேர்ச்சி கட்டாயம். 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் இத்தேர்வில் தேர்ச்சி பெற பொதுப் பிரிவினர் 60 சதவீதம், மற்ற பிரிவினர் 55 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும். தற்போது பிற பிரிவினருக்கு மட்டும் தேர்ச்சி மதிப்பெண் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 50 சதவீதமும், ஆதிதிராவிடர், பழங் குடியினருக்கு 40 சதவீதம் என தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுப் பிரிவினருக்கும் மதிப்பெண் குறைத்திருக்க வேண்டும். இது தமிழக அரசின் ஏற்றத்தாழ்வு நடவடிக்கையை காட்டுகிறது என விமர்சனம் எழுந்துள்ளது.
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை மாநில தலைவர் ஆரோக்கியதாஸ் கூறியதாவது:
சமூக நீதியை பின்பற்றும் தி.மு.க., அரசு பொதுப் பிரிவினரை கண்டுகொள்ளவில்லை. டெட் என்பது தகுதிக்கானது தான். இதில் தேர்ச்சி பெற்றாலும் பணிநியமனத்திற்கு போட்டித் தேர்வும் எழுத வேண்டும். அதில் அவர்கள் கட்டாயம் அதிக மதிப்பெண் பெற வேண்டும்.
டெட் தேர்ச்சி மதிப்பெண்ணை மாநில அரசுகள் குறைத்துக் கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன்படி பீஹாரில் தற்போது பொதுப் பிரிவினருக்கு 50 சதவீதம், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீதம், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 40 சதவீதம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதையே தமிழகத்திலும் பின்பற்றலாம்.
தமிழகத்தில் நடத்தப்படும் டெட் தேர்வில், இளங்கலை பட்டம், பி.எட்., வகுப்புகளில் படிக்காத பாடங்களிலும் இருந்தும் கேள்விகள் இடம் பெறுகின்றன. தேர்வு கடினமாக உள்ளது. பீஹாரை பின்பற்றினால் ஆசிரியர் தரம் குறைய வாய்ப்பில்லை. ஏனெனில் டெட் தேர்ச்சி பெற்றாலும் தமிழகத்தில் போட்டித் தேர்வு எழுத வேண்டிய நடைமுறை உள்ளது. அதில் பெறும் மதிப்பெண்கள் தான் பணி நியமனத்திற்கு உதவும் என்றார்.

