28, 29ல் நடக்கிறது தினமலர் வழிகாட்டி - 2026 நிகழ்ச்சி
28, 29ல் நடக்கிறது தினமலர் வழிகாட்டி - 2026 நிகழ்ச்சி
UPDATED : மார் 23, 2026 02:27 PM
ADDED : மார் 23, 2026 02:29 PM

சென்னை:
மாணவர்களின் உயர்கல்வி, எதிர்கால தொழில் வாய்ப்புகள் குறித்து, வழிகாட்டுதல்களை வழங்கும், 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி, சென்னையில் வரும் 28, 29 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், தங்களின் உயர்கல்வி மற்றும் எதிர்கால தொழில் வாய்ப்புகள் குறித்து தெளிவான வழிகாட்டுதலை பெறும் வகையில், 'தினமலர்' நாளிதழ் சார்பில், 'வழிகாட்டி' நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
சிறப்பு மேடை
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில், வரும் 28, 29ம் தேதிகளில், காலை 10:00 மணி முதல் மாலை 06:30 மணி வரை, 'தினமலர் வழிகாட்டி - 2026' நிகழ்ச்சி நடக்கிறது.
மாணவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு அடித்தளமிடும் இந்த உன்னத நிகழ்ச்சி, மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் பயனுள்ள தகவல்களை வழங்கும் சிறப்பு மேடையாக அமையும்.
நிகழ்ச்சியில், 100க்கும் அதிகமான கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள், தங்கள் அரங்குகளை அமைத்து, மாணவர்களுக்கு படிப்பு, சேர்க்கை தொடர்பான தகவல்களை வழங்க உள்ளன.
இதில், 20க்கும் மேலான துறை சார்ந்த நிபுணர்கள், கல்வியாளர்கள், மாணவர்களுக்கு நேரடியாக ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.
'செயற்கை நுண்ணறிவு எனும் ஏ.ஐ., உலகை ஆளுமா, ஐ.டி., துறையில் உள்ள வேலை வாய்ப்புகள், அனைவருக்கும் ஏ.ஐ., அவசியமா, நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி' என்பது போன்ற பல முக்கிய கேள்விகளுக்கு, நிபுணர்கள் நேரடி விளக்கம் அளிக்க உள்ளனர்.
கல்விக்கடன்
உதவித்தொகையுடன் உயர் கல்வி பெறுவது எப்படி, கல்விக்கடன் பெறும் நடைமுறைகள் போன்ற முக்கிய விஷயங்களையும், நிபுணர்கள் விளக்க உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில், ஏ.ஐ., ரோபோடிக்ஸ், ஏ.ஆர்., வி.ஆர்., போன்ற நவீன தொழில்நுட்ப கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில், 'லேப்டாப், டேப், ஸ்மார்ட் வாட்ச்' ஆகியவை பரிசாக பெறும் வாய்ப்புகளும் உள்ளன.
இந்த வழிகாட்டி நிகழ்ச்சியை, 'தினமலர்' நாளிதழுடன், ஸ்ரீ கிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன், ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனம், அம்ரிதா விஸ்வா வித்யாலயா ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றன.
உயர்கல்வி மற்றும் எதிர்கால தொழில் வாய்ப்புகள் குறித்து, தெளிவான வழிகாட்டுதலை பெற விரும்பும் மாணவர்களும் பெற்றோரும், இந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று பயன் பெறலாம்.
மாணவர்களுக்கு வழிகாட்டும் வல்லுநர்கள்
ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் துறை - டாக்டர் சவுந்தரராஜன்
வேலைவாய்ப்பு சார்ந்த படிப்புகள் - கல்வியாளர் ரமேஷ் பிரபா
நீங்களும் ஒரு ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., ஆகலாம் - டாக்டர் சைலேந்திர பாபு ஐ.பி.எஸ்.,
தொழில்துறைத் தேவைகள் - நிபுணர் பரதன் பிரகலாத்
'ட்ரோன்' தொழில்நுட்பம் - பேராசிரியர் செந்தில்குமார் எம்.ஐ.டி.,
தொழில்முறை வழிகாட்டுதல் - கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி
எதிர்காலத்திற்கான திறன்கள் - 'நாஷ்காம்' இயக்குநர் உதயசங்கர்
இந்தியாவில் தொழில்நுட்பக் கல்வி - ஏ.ஐ.சி.டி.இ., முன்னாள் தலைவர் டாக்டர் சீதாராமன்
நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்கள் - மஹிந்திரா குரூப், சங்கர் வேணுகோபால்
நீங்களும் விஞ்ஞானி ஆகலாம் - டாக்டர் தில்லி பாபு
நீட், ஜே.இ.இ., நுழைவு தேர்வுகளுக்கான குறிப்புகள் - கல்வி ஆலோசகர் அஸ்வின்

