முதல்வர் திறந்த அரசு பள்ளி ஓராண்டில் இடிந்ததேன்: வாசன்
முதல்வர் திறந்த அரசு பள்ளி ஓராண்டில் இடிந்ததேன்: வாசன்
UPDATED : ஜூலை 24, 2025 12:00 AM
ADDED : ஜூலை 24, 2025 07:27 AM
சென்னை:
கடந்த ஆண்டு கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது குறித்து வாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை:
ஈரோடு மாவட்டம், கூகலுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த பள்ளிக் கட்டடம், 2024 ஜூலையில், முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்பட்டது. ஓராண்டில் பள்ளி கட்டடம் இடிந்தது, அரசின் செயலற்ற தன்மையையே வெளிப்படுத்துகிறது.
பள்ளிக் கட்டடங்களை யார் கட்டினாலும் சரி; முதல்வர் மட்டுமல்ல, யார் திறந்தாலும்; அவற்றின் தரமானது, ஒதுக்கிய நிதி மதிப்பீட்டிற்கு சற்றும் குறையாமல் இருக்க வேண்டும். அதைவிடுத்து ஒதுக்கிய நிதியில், லஞ்சம், ஊழல் என கணக்கிட்டு, வேலை பார்த்தால், தரம் இருக்காது. கடந்த நான்கு ஆண்டுகளில், அரசு பள்ளி கட்டடங்களின் தரத்தை மேம்படுத்த அல்லது புதிய கட்டடங்கள் கட்ட ஒதுக்கப்பட்ட நிதி, முறையாக செலவிடப்பட்டதா என ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.