சர்ச்சையில் கவர்னருக்கு தொடர்பில்லை; மன்னிப்பு கோரியது பிரசார் பாரதி!
சர்ச்சையில் கவர்னருக்கு தொடர்பில்லை; மன்னிப்பு கோரியது பிரசார் பாரதி!
UPDATED : அக் 19, 2024 12:00 AM
ADDED : அக் 19, 2024 03:34 PM

சென்னை:
தமிழ்த்தாய் வாழ்த்தில் ஒரு வரி விடுபட்டதில், கவர்னருக்கோ, கவர்னர் மாளிகைக்கோ எந்த தொடர்பும் இல்லை,'' என கவர்னர் மாளிகை கூறியுள்ளது. இது கவனக்குறைவால் நேரிட்ட தவறு என்று கூறியுள்ள பிரசார் பாரதி, அதற்காக மன்னிப்பு கோரியுள்ளது.
தமிழக கவர்னரின் மீடியோ ஆலோசகர் திருஞான சம்பந்தம் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:
சென்னை சேப்பாக்கத்தில் டிடி தமிழ் தொலைக்காட்சி ஏற்பாடு செய்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய குழுவினர் கவனக்குறைவாக திராவிடம் என்ற வார்த்தையைக் கொண்ட வரியை தவற விட்டு விட்டனர். இவ்விவகாரம் உடனடியாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதைத் தவிர கவர்னருக்கோ அல்லது கவர்னர் மாளிகைக்கோ எந்த தொடர்பும் இல்லை. தமிழ் மொழி மற்றும் மக்களின் உணர்வுகள் மீது கவர்னர் உயர்ந்த எண்ணத்தை கொண்டுள்ளார். அது எப்போதும் தொடரும்.
இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.
மன்னிப்பு கோரியது டிடி தமிழ்
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக பிரசார் பாரதி துார்தர்ஷன் சென்னை கேந்திரா டிடி தமிழ் வெளியிட்ட அறிக்கை:
டி.டி., சென்னை சார்பில் நடந்த ஹிந்தி மாத நிறைவு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்தின் ஒரு வரி கவனக்குறைவால் விடுபட்டு விட்டது. அந்த தவறுக்கு மன்னிப்பு கோருகிறோம். தமிழையோ, தமிழ்த்தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் நோக்கம் இல்லை. இந்த விஷயத்தில் தமிழக கவர்னருக்கு ஏற்பட்ட சங்கடத்துக்கு மன்னிப்பு கோருகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.