திறப்பு விழாவுக்கு தயாராக அறிவுசார் மையம் போட்டித்தேர்வர்கள் எதிர்பார்ப்பு
திறப்பு விழாவுக்கு தயாராக அறிவுசார் மையம் போட்டித்தேர்வர்கள் எதிர்பார்ப்பு
UPDATED : ஜூலை 11, 2024 12:00 AM
ADDED : ஜூலை 11, 2024 09:53 AM

உடுமலை:
உடுமலையில், நுாலகம் மற்றும் அறிவுசார் மைய பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தமிழக அரசு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில், அனைத்து நகரங்களிலும், நுாலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கப்படும் என அறிவித்தது.
அதன்படி, உடுமலை நகரில், நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ், யு.கே.சி., நகர் பகுதியில், இடம் தேர்வு செய்யப்பட்டு, 2.3கோடி ரூபாய் மதிப்பீட்டில், மைய கட்டடம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.
தற்போது பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், அறிவுசார் மையத்தை பயன்பாட்டுக்கு திறக்க எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த மையத்தில், போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு பயிற்சியும், வழிகாட்டுதலும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான புத்தகங்கள் நுாலகத்தில் வைக்கப்பட்டு, படிக்க தேவையான கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கம்ப்யூட்டர்கள் மற்றும் இன்டர்நெட் வசதியும் வழங்கப்பட்டு, தேர்வர்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை பெறவும் வசதி செய்து தரப்பட உள்ளது. வழிகாட்டுதலுக்கு தேவையான வகுப்புகள் நடத்த தனி அறையும், குழந்தைகள் படிக்கவும், அவர்களுக்கு தேவையான இருக்கை வசதிகளும் மையத்தில் உள்ளது.
உடுமலை நகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில், போட்டித்தேர்வுகளுக்கு ஏராளமானவர்கள் தயாராகி வருகின்றனர். இவர்கள், தளி ரோடு நுாலகத்திலும், நாராயண கவி மணிமண்டப நுாலகத்திலும் படித்து வருகின்றனர்.
அவர்களுக்கு புதிதாக திறக்கப்பட உள்ள நுாலகம் மற்றும் அறிவுசார் மையம் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.