ஜம்முகாஷ்மீர் வரை எட்டி பார்த்த U வடிவ பள்ளி பெஞ்ச் முறை: முன் மாதிரியாக மாறிய கேரளா
ஜம்முகாஷ்மீர் வரை எட்டி பார்த்த U வடிவ பள்ளி பெஞ்ச் முறை: முன் மாதிரியாக மாறிய கேரளா
UPDATED : ஜூலை 13, 2025 12:00 AM
ADDED : ஜூலை 13, 2025 09:04 AM

ஸ்ரீநகர்:
கேரளாவை பின்பற்றி பள்ளிகளில் இருக்கும் கடைசி பெஞ்ச் பாகுபாட்டை மாற்றும் நடவடிக்கையில் ஜம்முகாஷ்மீர் பள்ளிக்கல்வித்துறை இறங்கி உள்ளது.
வித்தியாசமான கதை மற்றும் காட்சி அமைப்புகளுடன் வெளியாகும் கேரளாவின் மல்லுவுட் சினிமாக்களுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. எளிமையான படப்பிடிப்பு பின்னணி, குறைவான வசனங்கள் மற்றும் கதாபாத்திரங்களே அதற்கு காரணம்.
அண்மையில் இப்படி ஒரு வடிவமைப்புடன் வெளியான ஒரு படம் ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன். பள்ளி வகுப்பறையில் முன்வரிசையில் நன்றாக படிக்கும் மாணவர்கள், பின் வரிசையில் ஒழுங்காக படிக்காத மாணவர்கள் அமர்வது என்ற வித்தியாசமான நடைமுறை வழக்கமாக இருக்கிறது.
இந்த முறை மற்றும் அதில் ஏற்படும் சிக்கல்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன். திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் நடைபெற்றதாக கதையின் காட்சிகள் இடம்பெற்று இருக்கும். குறிப்பாக ஆசிரியர் நடுவில் நிற்க, மாணவர்கள் அவரை சுற்றி அரைவட்ட வடிவில் போடப்பட்டு இருக்கும் பெஞ்சுகளில் அமர்ந்து பாடத்தை கவனிப்பர்.
பெரும் வரவேற்பை பெற்ற இந்த நடைமுறை கேரளாவில் பள்ளிகளில் ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்த 8 பள்ளிகளில் இதுபோன்ற முறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. கேரளா தொடங்கி வைத்த இந்த முறை தற்போது ஜம்முகாஷ்மீர் வரை தாக்கத்தை உண்டு பண்ணியிருக்கிறது.
அம்மாநிலத்தில் உள்ள சில பள்ளிகளில் U வடிவ முறையில் பெஞ்சுகள் அமைக்க நடவடிக்கைகள் தொடங்கி இருக்கின்றன. இதை பள்ளிகளில் நடைமுறைப்படுத்துமாறு கல்வியாளர்களும் வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.