பொறியியல் பட்டதாரிகளின் தேவை அதிகமாக உள்ளது; கமிஷனர் தகவல்
பொறியியல் பட்டதாரிகளின் தேவை அதிகமாக உள்ளது; கமிஷனர் தகவல்
UPDATED : மே 05, 2025 12:00 AM
ADDED : மே 05, 2025 08:25 AM
மதுரை :
நாட்டில் பொறியியல் பட்டதாரிகளின் தேவை அதிகமாக உள்ளது. அதற்கேற்ப மாணவர்கள் தங்களை திறமையானவர்களாக மாற்றிக்கொள்ள வேண்டும் என மதுரை வருமான வரித்துறை முதன்மை கமிஷனர் வசந்தன் பேசினார்.
மதுரை வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியின் 13வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தாளாளர் வேல்மோகன் தலைமை வகித்தார். முதல்வர் அல்லி வரவேற்றார். மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை தலைவர் டாக்டர் நம்பெருமாள்சாமி பேசுகையில், ''மாணவர்கள் மிகப்பெரிய இலக்குகளை நிர்ணயித்து அதை அடைய உழைக்க வேண்டும்.
கல்வி சிறந்த சாதனைகளை சாதிக்க வைக்கும் சக்தியாகும். நாட்டின் வளர்ச்சிக்கு மாணவர்களின் திறமைகளை பயன்படுத்த வேண்டும். ஒருபோதும் கற்பதை நிறுத்திவிடக்கூடாது என்றார்.சிறப்பு விருந்தினரான மதுரை வருமான வரி முதன்மை கமிஷனர் வசந்தன் பேசுகையில், தோல்விகளை நேர்மறை அணுகுமுறையுடன் மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டும். நாட்டில் பொறியியல் பட்டதாரிகளின் தேவை அதிகமாக உள்ளது. அதற்கேற்ப மாணவர்கள் தங்களை திறமையானவர்களாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
நாட்டின் முன்னேற்றத்துக்கு தங்களின் பங்களிப்பை அளித்து ஆசிரியர், பெற்றோர் பெருமைபடும்படி சாதனை படைக்க வேண்டும் என்றார்.
மேலும், சிவில் சர்வீஸில் பொறியியல் மாணவர்களுக்கு உள்ள வேலை வாய்ப்பு பற்றிய தகவல்களையும் வசந்தன் விளக்கினார். 167 மாணவிகள், 211 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. டீன் சண்முகலதா நன்றி கூறினார்.
