UPDATED : அக் 31, 2024 12:00 AM
ADDED : அக் 31, 2024 11:19 AM
திருப்பத்துார்:
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் பஞ்., உட்பட்ட ராமசந்திரபுரத்திலுள்ள அரசு துவக்கப்பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
வகுப்பறை கட்டடம் சேதமானதால், 6 மாதங்களுக்கு முன் இடிக்கப்பட்டது. புதிய வகுப்பறை இதுவரை கட்டாததால், மாணவ - மாணவியர் திறந்தவெளியில், மழை காலங்களில் சேரும் சகதியுமான இடத்தில் அமர்ந்து படிக்கின்றனர்.
இதில் ஆத்திரமடைந்த மாணவ - மாணவியர், புதிய வகுப்பறை கட்டடம் கட்டி தரக்கோரி, நேற்று ஆம்பூர் - பேரணாம்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
ஆம்பூர் டி.எஸ்.பி., அறிவழகன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ - மாணவியவரை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். ஆத்திரமடைந்த பெற்றோரும் மறியலில் ஈடுபட்டனர்.
மாதனுார் பி.டி.ஓ., மணவாளன், மறியலில் ஈடுபட்டவர்களிடம் நடவடிக்கை எடுக்கப்படும் என, சமாதானப்படுத்திய பின், மறியல் கைவிடப்பட்டது.