UPDATED : ஆக 01, 2026 11:04 AM
ADDED : ஆக 01, 2026 11:05 AM
சென்னை:
“புதிய தொழில்நுட்பங்களை கற்று, புதிய வணிகத் தொடர்புகளை உருவாக்கி, தங்கள் தொழிலை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்ல வேண்டும்,” என, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் மதன் ராஜா தெரிவித்தார்.
'மிடாஸ் டச் ஈவென்ட்ஸ் அண்டு டிரேட் பேர்ஸ் எல்.எல்.பி.,' நிறுவனம் சார்பில், 'வேர்மேட் - 2026' எனும், மூன்று நாள் தொழில்துறை வணிகக் கண்காட்சியின் ஏழாவது பதிப்பு, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தொடங்கியது.
கண்காட்சியை தொடங்கி வைத்த, அமைச்சர் மதன் ராஜா பேசியதாவது:
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்பிற்கும், எம்.எஸ்.எம்.இ., எனும் சிறு, குறு தொழில் நிறுவனங்களே முக்கிய அடித்தளம்.
டிஜிட்டல் உலகம் வளர்ந்தாலும், ஒரு கண்காட்சியில் நேரடியாக இயந்திரங்களை பார்த்து, அவற்றின் செயல்பாட்டை அறிந்து, சரியான தொழில்நுட்பத்தை தேர்வு செய்வதற்கு மாற்று எதுவுமில்லை.
வெறும் தயாரிப்போடு தொழிற்சாலையின் வெற்றி முடிந்து விடுவதில்லை. மூலப்பொருள் கையாளுதல், கிடங்கு சேமிப்பு, பாதுகாப்புடன் பேக்கிங் செய்தல் போன்றவற்றில், நவீன அமைப்புகளை பயன்படுத்தினால், உற்பத்தித் திறன் உயர்ந்து, செலவுகள் குறையும். அதற்கு, 'வேர்மேட்' போன்ற கண்காட்சிகள் மிக அவசியம்.
இதன் வாயிலாக, தொழில் முனைவோர், புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டு, புதிய வணிகத் தொடர்புகளை உருவாக்கி, தங்கள் தொழிலை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
தமிழகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொடங்க விரும்புவோருக்கு, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
'முன்பதிவு செய்தால் சிறப்பு தள்ளுபடி'
'மிடாஸ் டச் ஈவென்ட்ஸ் அண்டு டிரேட் பேர்ஸ் எல்.எல்.பி.,' நிறுவனத்தின் நிறுவனர் விவேகானந்தன் கூறியதாவது:
நாட்டின் கிடங்கு மேலாண்மை, மெட்டீரியல் ஹேண்ட்லிங், லாஜிஸ்டிக்ஸ், பேக்கேஜிங், தொழில்துறை தானியக்கம், ரோபோட்டிக்ஸ் மற்றும் போக்குவரத்து துறைகளின் சமீபத்திய தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமைகளை ஒரே இடத்தில் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியாக இக்கண்காட்சி உள்ளது.
தொழில்நுட்ப வல்லுநர்கள், வழங்குநர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களை ஒரே தளத்தில் இணைத்து, புதிய தீர்வுகளை ஆராயவும், வணிகக் கூட்டாண்மைகளை உருவாக்கவும், வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை அடையாளம் காணவும் உதவுவதே இதன் நோக்கம். கண்காட்சியில், 130க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. அனைவரும், பார்வையிடலாம். தயாரிப்புகளை முன்பதிவு செய்வோருக்கு, சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
