UPDATED : மார் 14, 2026 09:22 PM
ADDED : மார் 14, 2026 09:23 PM
கடலுார்:
கடலுார் மாவட்டத்தில் நாளை நடக்கும் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வை 637 பேர் எழுத உள்ளனர்.
இது குறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப் - 2 (தொகுதி - 2 மற்றும் தொகுதி 2 - ஏ) பதவிக்கான முதன்மை எழுத்துத் தேர்வு நாளை 15ம் தேதி நடக்கிறது. மாவட்டத்தில் கடலுார், அரசு பெரியார் கல்லுாரியில், இத்தேர்வு நடக்கிறது. காலையில் நடக்கும் தேர்வை 315 பேர், மதியம் நடக்கும் தேர்வை 322 பேர் என, மொத்தம் 637 பேர் எழுதுகின்றனர்.
தேர்வுக்கூட அனுமதி சீட்டு உள்ளவர்கள் மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். காலையில் தேர்வு எழுதுவோர் 08:30 மணிக்குள்ளும், மதியம் தேர்வு எழுதுவோர் 01:30 மணிக்குள்ளும் தேர்வு மையத்திற்குள் இருக்க வேண்டும்.
தேர்வர்கள் பிளாக் பால் பாயின்ட் பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஓம்.எம்.ஆர்., விடைத்தாளில் தங்கள் கையெழுத்தை அதற்கென குறிப்பிட்டுள்ள, 2 இடங்களில் கையெழுத்திட வேண்டும்.
தேர்வு முடிவடைந்த பின், தேர்வர்கள் தங்களின் விடைத்தாளில் அதற்கென உரிய கட்டத்தில் இடது கை பெருவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும்.
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும். தேர்வர்கள் தங்கள் போட்டோ அடையாளத்திற்கான ஏதாவது ஒரு அசல் அடையாள அட்டை வைத்துக் கொள்ள வேண்டும்.
பென்சில், கலர் பென்சில்கள், ரப்பர் போன்ற எழுது பொருட்களையும், மொபைல் போன், கால்குலேட்டர், மின்னணு கடிகாரம், ப்ளூடூத் டிவைஸ் போன்ற மின்னணு சாதனங்களையும் தேர்வு மையத்திற்கு கொண்டு வர அனுமதியில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

