ஜே.எஸ்., குளோபல் அகாடமியில் பாரம்பரிய இயற்கை திருவிழா
ஜே.எஸ்., குளோபல் அகாடமியில் பாரம்பரிய இயற்கை திருவிழா
UPDATED : ஜன 12, 2026 02:04 AM
ADDED : ஜன 12, 2026 02:04 PM

கள்ளக்குறிச்சி: ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் பாரம்பரிய இயற்கை திருவிழா நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் புறவழிச்சாலையில் உள்ள ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடந்த பாரம்பரிய திருவிழாவிற்கு, பள்ளி நிறுவனர் டாக்டர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். தாளாளர் ஜனனி செந்தில்குமார் குத்துவிளக்கேற்றி பாரம்பரிய திருவிழாவை துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் ஜெயலட்சுமி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் கடந்த கால நிகழ்வுகளை நடப்பு தலைமுறை மாணவர்கள் தெரிந்து கொள்வதற்காக பலுான் கடை, பெட்டிக்கடை, வளையல் விற்பனையகம், இளநீர், கரும்பு, பொரி, ஜவ்வு மிட்டாய் ஆகியவற்றிற்கு தனி, தனி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.
பாரம்பரிய கலைகளான சிலம்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் அரங்குகளை பார்வையிட்டு, மாட்டுவண்டியில் ஏறி பள்ளி வளாகத்தில் வலம் வந்ததுடன், ராட்டினத்தில் அமர்ந்து விளையாடினர். மாணவர்களுக்கு இளவட்ட கல் துாக்கும் போட்டியும், பெற்றோர்களுக்கு தாயம், அஞ்சாங்கல், பரமபதம், நொண்டி, கோலி குண்டு, பம்பரம் விடுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. பெண்களுக்கு மருதாணி வைத்தல் நிகழ்ச்சி நடந்தது.
அதேபோல், 4 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இயற்கை உணவு கண்காட்சி நடந்தது. உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகள், நவதானிய உணவு வகைகள் காட்சி படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி துணை முதல்வர் பாபு, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

