UPDATED : மே 16, 2025 12:00 AM
ADDED : மே 16, 2025 10:19 AM
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி புதிய நுாலக கட்டத்துக்கு புத்தகங்கள் இடமாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பொது நுாலகத்துறைக்கு சொந்தமான கிளை நுாலகம், பொள்ளாச்சி மரப்பேட்டையில், 12 சென்ட் இடத்தில் கடந்த, 1954ல் அமைக்கப்பட்டது. ஒரு லட்சம் நுால்கள், 16 ஆயிரம் உறுப்பினர்களை கொண்ட நுாலகமாக செயல்படுகிறது.
பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் செயல்படும், 40 ஊர்ப்புற, பகுதிநேர மற்றும் கிளை நுாலகங்களின் ஊதிய மையமாகவும் உள்ளது.
நுாலக கட்டடம் பழமையின் காரணமாக, மழைக்கு ஒழுகியதுடன் பரிதாபமான நிலைக்கு மாறியது. நீண்ட கால போராட்டத்துக்கு பின், கடந்த, 2019ம் ஆண்டு நுாலகம் பழைய குடிமைப்பொருள் அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
புதிய கட்டடம் கட்டுவதற்காக கடந்த, 2023ம் ஆண்டு செப்., மாதம் பழமை வாய்ந்த கட்டடம் இடிக்கப்பட்டது.அதன்பின், நுாலகத்துறை சார்பில், ஒரு கோடி ரூபாய் செலவில் தரைதளம், முதல் தளத்துடன் கட்டுமான பணிகள் நடைபெற்றன.
கடந்த மாதம் கோவை வந்த துணை முதல்வர் உதயநிதி, காணொலி வாயிலாக நுாலக கட்டடத்தை திறந்து வைத்தார்.
இதையடுத்து, பழைய குடிமைப்பொருள் அலுவலக கட்டடத்தில் இருந்து புத்தகங்கள், தளவாட பொருட்கள், புதிய நுாலக கட்டடத்துக்கு கொண்டு செல்லும் பணியில் நுாலக பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்பணிகள் நிறைவடைந்த பின்னர், வாசகர்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படுவர், என, நுாலகர்கள் தெரிவித்தனர்.