முதல்வர் படத்துடன் பட்டம் பெற்ற பல்கலை மாணவரால் பரபரப்பு
முதல்வர் படத்துடன் பட்டம் பெற்ற பல்கலை மாணவரால் பரபரப்பு
UPDATED : பிப் 04, 2026 09:12 AM
ADDED : பிப் 04, 2026 09:15 AM

சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில், கவர்னர் ரவியிடம் பட்டம் பெற்ற மாணவர், அதில் முதல்வர் படத்தை வைத்து வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார் மாவட்டம் , சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில், 87வது பட்டமளிப்பு விழா நடந்தது. பல்கலை வேந்தரும், தமிழக கவர்னருமான ரவி பங்கேற்று, 1,015 மாணவ - மாணவியருக்கு பட்டங்களையும், பல்வேறு பாடங்களில் முதன்மையாக தேர்ச்சி பெற்ற, 45 மாணவ - மாணவியருக்கு பல்வேறு அறக்கட்டளைகள் சார்பில் தங்கப்பதக்கமும் வழங்கினார்.
புஷ்பராஜ் என்ற மாணவர் பட்டம் வாங்கிய போது, திடீரென தன் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த முதல்வர் ஸ்டாலின் படத்தை எடுத்து, தான் பெற்ற பட்டத்தின் மீது வைத்து வாங்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின் பட்டம் பெற வந்த மாணவர்களை, பல்கலை நிர்வாகிகள் உரிய சோதனைக்கு பிறகே மேடைக்கு அனுப்பினர்.
பட்டமளிப்பு விழாவில், உயர்கல்வித் துறை அமைச்சர் செழியன் பங்கேற்பார் என, குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அவர் விழாவை புறக்கணித்தார்.
இதற்கு முன், திருநெல்வேலி, மனோன்மணியம் பல்கலையில், கவர்னர் ரவியிடம் பட்டம் பெற மறுத்து, துணைவேந்தரிடம் மாணவி ஒருவர் பட்டம் பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

