தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகள்; சம்பளமின்றி தவிக்கும் ஆசிரியர்கள்; 5 மாதங்களாக 'விடியல்' கிடைக்கவில்லை
தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகள்; சம்பளமின்றி தவிக்கும் ஆசிரியர்கள்; 5 மாதங்களாக 'விடியல்' கிடைக்கவில்லை
UPDATED : டிச 20, 2025 08:59 AM
ADDED : டிச 20, 2025 09:00 AM

மதுரை:
தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு 5 மாதங்களாக சம்பளம் கிடைக்கவில்லை.
மாநிலத்தில் 14 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலையாக ஜூலையில் தரம் உயர்த்தப்பட்டன. இப்பள்ளிகள் ஆகஸ்ட் முதல் செயல்படுகின்றன. இங்கு தலா ஒரு தலைமையாசிரியர், பாடம் வாரியாக தலா 5 ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. அந்த இடங்களில் பணிமாறுதல், பதவி உயர்வு மூலம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு 5 மாதங்களாக சம்பளம் வழங்குவதில் தொழில்நுட்ப ரீதியான சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் பொருளாதார ரீதியாக பாதித்து மனஉளைச்சலில் தவிக்கின்றனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:
அரசு ஊழியர்களுக்கான சம்பளம் விவரம் ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., என்ற 'அரசின் நிதி, மனிதவள மேலாண்மைக்கான ஒருங்கிணைந்த சாப்ட்வேர்'ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உருவாக்கப்பட்ட பணியிடங்கள் விவரம் இந்த சாப்ட்வேரில் பதிவேற்றம் செய்யப்பட்ட நிலையில், சம்பளம் அனுமதி கிடைப்பதில்லை. இதுதொழில்நுட்பம் சார்ந்த பிரச்னையாகவும், சாப்ட்வேர் பதிவேற்றம் செய்யாமலும் உள்ளது. இதனால் புதிய பணியிடங்கள் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை.
இப்பிரச்னை குறித்து கல்வி அதிகாரிகள் கவனத்திற்கு ஆகஸ்ட்டில்ஆசிரியர்கள் கொண்டுசென்றும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. ஆசிரியர் சார்ந்த பிரச்னைகளுக்கும் முடிவு தெரிவதில்லை. சம்பந்தப்பட்ட 'சாப்ட்வேரை' பராமரிப்போரின் அலட்சியத்தால் இதுபோன்ற சிக்கல் நீடிக்கிறது. இதனால் ஆசிரியர்கள் குடும்ப ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். இயக்குநர் இவ்விஷயத்தில் இனிமேலாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

