விசா விதிகளை கடுமையாக்கியது அமெரிக்கா; இந்திய மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு
விசா விதிகளை கடுமையாக்கியது அமெரிக்கா; இந்திய மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு
UPDATED : ஜூலை 18, 2026 10:33 AM
ADDED : ஜூலை 18, 2026 10:34 AM

வாஷிங்டன்:
விசா விதிகளில் அமெரிக்க அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்களால், இந்திய மாணவர்கள் பாதிக்கப்படலாம் என, தகவல் வெளியாகி உள்ளது.
உயர்கல்விக்காக அமெரிக்கா செல்ல வேண்டும் என்பது உலகம் முழுதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்களின் கனவாக உள்ளது. குறிப்பாக, அமெரிக்காவில் தங்கி படிக்கும் சர்வதேச மாணவர்களில், 31 சதவீதம் பேர் இந்தியர்கள்.
இந்நிலையில், அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு, அங்கு உயர்கல்வி பயின்று வரும் மற்றும் பயில திட்டமிட்டுள்ள லட்சக்கணக்கான இந்திய மாணவர்களின் எதிர்கால கனவிலும், வேலைவாய்ப்பு திட்டங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விசா மாற்றங்களை செய்துள்ளது.
மேலும், கலாசாரம், கல்வி மற்றும் தொழில்நுட்ப அறிவை பகிர்ந்து கொள்வதற்காக அமெரிக்கா செல்லும் எக்ஸ்சேஞ்ச் விசிட்டர்ஸ் விசா, பத்திரிகையாளர் விசாவிலும் பல மாற்றங்களை செய்துள்ளது. 1978 முதல், வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் தங்களின் படிப்பு காலம் முழுதும், முறையான அரசு கண்காணிப்பு இல்லாமல் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால், அமெரிக்காவின் புதிய கொள்கையின்படி, மாணவர்களும், கலாசார பார்வையாளர்களும், அதிகபட்சமாக நான்கு ஆண்டுகள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவர். மேலும் படிப்பை முடித்த பின், வேறு கல்லுாரிக்கு மாற அல்லது நாட்டை விட்டு வெளியேற, 60 நாட்கள் அவகாசம் இருந்தது. அது இனி, 30 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
அதே போல், வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு, 240 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும். சீன குடிமக்களுக்கு இந்த காலக்கெடு மேலும் குறைக்கப்பட்டு, 90 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கும் அதிகமாக நீளும் படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்கள், தங்களது கல்வியைத் தொடர புதிய அனுமதி அல்லது விசா நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
அரசு உதவி பெற்றால் 'கிரீன் கார்டு' இல்லை
அமெரிக்க அரசின் இலவச மருத்துவ காப்பீடான, 'மெடிகேட்', இலவச உணவு உதவி திட்டமான, 'புட் ஸ்டாம்ப்' மற்றும் வீட்டு வசதி மானியங்களை பயன்படுத்தும் வெளிநாட்டினருக்கு இனி, 'கிரீன் கார்டு' எனப்படும் நிரந்தர குடியுரிமை மறுக்கப்படலாம் என, கூறப்படுகிறது.
அமெரிக்காவிற்கு வரும் வெளிநாட்டினர் தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ளும் பொருளாதாரத் திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும். உழைக்கும் அமெரிக்க மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசு நலத்திட்டங்களை நம்பி, அவர்கள் நாட்டிற்கு பாரமாக இருக்கக் கூடாது. இந்த அடிப்படை கொள்கையை நிலைநாட்டவே இந்த விதி மீண்டும் கொண்டு வரப்படுகிறது என, அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
