பள்ளிகளில் வந்தே மாதரம் கட்டாயம்: புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு
பள்ளிகளில் வந்தே மாதரம் கட்டாயம்: புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு
UPDATED : பிப் 12, 2026 09:53 PM
ADDED : பிப் 12, 2026 09:59 PM

புதுடில்லி:
'வந்தே மாதரம்' பாடல் இசைக்கப்படுவது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 'அனைத்து அரசு விழாக்கள் மற்றும் பள்ளிகளில் தேசிய கீதம் பாடுவதற்கு முன்பாக, வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டியது கட்டாயம்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேற்கு வங்க கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி, 1870ல் 'வந்தே மாதரம்' தேச பக்தி பாடலை எழுதினார்.
அழைப்பு
முதல் முதலாக, 1882ல், 'ஆனந்தமடம்' என்ற வங்க நாவலில் இப்பாடல் இடம் பெற்றது. தேசிய கீதம் எழுதிய மற்றொரு வங்க கவிஞரான ரவீந்திரநாத் தாகூர், வந்தே மாதரம் பாடலுக்கு இசையமைத்தார்.
'தாய் மண்ணே வணக்கம்' என பொருள்படும், இப்பாடல் சுதந்திர போராட்டத்தின் போது, நம் மக்களுக்கு தேச பக்தியை கிளர்ந்தெழச் செய்தது. இதனால், இப்பாடலுக்கு அப்போதைய பிரிட்டிஷ் அரசு தடை விதித்தது.
கடந்த, 1937ல் இந்திய தேசிய காங்கிரஸ், வந்தே மாதரம் பாடலை தேசிய பாடலாக ஏற்றுக் கொண்டது. மொத்தம் ஆறு சரணங்கள் கொண்ட இப்பாடலில், முதல் இரு சரணங்களை மட்டுமே காங்கிரஸ் ஏற்றது.
மற்ற நான்கு சரணங்கள் ஹிந்து கடவுள்களை போற்றும் வகையில் இருப்பதால், முஸ்லிம் தலைவர்கள் மனதில் வெறுப்புணர்வை வளர்க்க நேரிடும் என கருதி அப்போது அதனை நீக்க முடிவு எடுக்கப்பட்டது.
நாடு சுதந்திரம் அடைந்த பின், 1950ல் வந்தே மாதரம் தேசிய பாடலாக மத்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தச் சூழலில், வந்தே மாதரம் பாடலின் நுாற்றாண்டு விழாவை நாடு முழுதும் கொண்டாட, பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
இரண்டு சரணங்களை மட்டுமே ஏற்றுக் கொண்டு காங்கிரஸ் துரோகம் செய்து விட்டதாகவும் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டி இருந்தார். இதனால், இந்த விவகாரம் பார்லி.,யில் பெரும் புயலை கிளப்பியது.
இந்நிலையில், தேசிய கீதத்திற்கு மரியாதை தருவது போல, தேசிய பாடலான வந்தே மாதரம் மதிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில், மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
குற்றம்
அதில், காங்கிரஸ் காலத்தில் நீக்கப்பட்ட நான்கு சரணங்களுடன் சேர்த்து மொத்தம் உள்ள ஆறு சரணங்களும் பாடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள்:
வந்தே மாதரம் பாடல் அனைத்து அரசு விழாக்கள், பள்ளிகளில் பாடப்பட வேண்டும்.
மொத்தம் உள்ள ஆறு சரணங்களும் பாடப்பட வேண்டும். பாடி முடிக்க 3 நிமிடங்கள் 10 வினாடிகள் ஆகும்.
அரசு விழாவில் முதலில் தேசிய பாடலான வந்தே மாதரமும், அதன் பின், தேசிய கீதமான ஜன கண மன... இரண்டும் பாடப்பட வேண்டும்.
வந்தே மாதரம் பாடப்படும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும்.
தேசிய சின்னங்களை போற்றும் வகையில், பள்ளிகளில் காலை நேர வழிபாட்டு கூட்டத்தின் போது வந்தே மாதரம் பாடல் இடம் பெற வேண்டும்.
அரசு விழாக்கள், பத்ம விருது வழங்கும் விழாக்கள், கொடியேற்ற நிகழ்வுகள், ஜனாதிபதி மற்றும் கவர்னர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடப்பட வேண்டும்.
இந்த வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து அரசு விழாக்கள், பள்ளி வழிபாட்டு கூட்டங்கள் மற்றும் பிற முக்கிய பொது விழாக்களில் உடனடியாக கடைபிடிக்க வேண்டும்.
அதே சமயம், திரையரங்குகளில் வந்தே மாதரம் பாடல் ஒலிக்கும் போதோ, திரைப்படத்தின் ஒரு காட்சியில் அப்பாடல் வரும் போதோ மக்கள் எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை.
புதிய விதிகளின்படி 1937ல் காங்கிரஸ் கட்சியால் நீக்கப்பட்ட பத்திகள், வந்தே மாதரம் பாடலில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தேசத்தின் மரியாதையை அவமதிக்கும் தடுப்புச் சட்ட ம் 1971, தேசிய கீதத்திற்கு மட்டுமே இருக்கிறது. அதே போல, சட்டப்பூர்வ பாதுகாப்பை தேசிய பாடலுக்கும் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. எனவே, வந்தே மாதரம் பாடலை அவமதிப்பதும் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என கூறப்படுகிறது.

