பற்றாக்குறையால் தண்ணீருக்கு போர் வேளாண் பல்கலை துணைவேந்தர் தகவல்
பற்றாக்குறையால் தண்ணீருக்கு போர் வேளாண் பல்கலை துணைவேந்தர் தகவல்
UPDATED : அக் 26, 2024 12:00 AM
ADDED : அக் 26, 2024 12:30 PM

சேலம்:
தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால் அதற்கு போர் வரும் சூழல் உள்ளது என வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி பேசினார்.
சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் வேளாண் பல்கலையின் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில் வெள்ளி விழா ஆண்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள், விதைகள், நினைவு பரிசுகளை வழங்கி புத்தகம் வெளியிட்டார். தொடர்ந்து, ஒரு கையில் ஏர் கலப்பை, மற்றொரு கையில் உலக உருண்டை வைத்துள்ள விவசாயி சிலையை திறந்து வைத்தார்.
பின் அவர் பேசியதாவது:
இந்தியா பொருளாதார ரீதியாக, 6வது இடத்தில் உள்ளது. 2047ல் இந்தியா முதன்மை இடத்துக்கு செல்ல, மத்திய, மாநில அரசுகள் முயற்சிக்கின்றன. மற்ற நாடுகள், இந்தியாவை திரும்பி பார்க்கும்படி ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால், அதற்கு போர் வரும் சூழல் உள்ளது. பயிர்களுக்கு சொட்டு நீர், நுண்ணீர் பாசனத்துக்கு சென்றுள்ளோம். தண்ணீரில் கரையும் உரங்களை, தற்போது பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
வேளாண் பல்கலை மூலம் கோவை, மதுரை உள்பட, 3 இடங்களில் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், கடந்த, 2023ல், 24 வகை பயிர்கள் கண்டறிந்து வெளியிடப்பட்டுள்ளது. ஒரு பயிர் கண்டுபிடிப்புக்கு, 200 செயல் விளக்க திடல் அமைத்து, 5 முதல், 6 ஆண்டுகளுக்கு பின் தான் புதுரகம் வெளியிடப்படுகிறது. 2025 ஜனவரி பொங்கல் பண்டிகையில் ஒரு புது பயிர் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.