பிளஸ் 2க்கு பின் என்ன படிக்கலாம்? சென்னையில் 28ல் தினமலர் - வழிகாட்டி
பிளஸ் 2க்கு பின் என்ன படிக்கலாம்? சென்னையில் 28ல் தினமலர் - வழிகாட்டி
UPDATED : மார் 16, 2025 12:00 AM
ADDED : மார் 16, 2025 11:20 AM

சென்னை:
தினமலர் நாளிதழ் மற்றும் கோவை ஸ்ரீகிருஷ்ணா நிறுவனங்கள் இணைந்து, பிளஸ் 2க்கு பின், உயர் கல்வியில் என்ன படிப்பை தேர்வு செய்யலாம்; எங்கு படிக்கலாம் என்ற பயனுள்ள கல்வி ஆலோசனைகளை வழங்கும், தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி, சென்னை கலைவாணர் அரங்கில், வரும் 28ம் தேதி துவங்கி, 30ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது.
பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, அவர்களின் எதிர்கால நலன் கருதி, கல்வி, வாழ்க்கை வழிகாட்டுதலுக்கான, வழிகாட்டி நிகழ்ச்சியை, தினமலர் நாளிதழ் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
இந்நிகழ்ச்சியில், அனுபவம் வாய்ந்த கல்வி நிபுணர்கள், பயனுள்ள ஏராளமான உயர் கல்வி ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
சாதிக்க டிப்ஸ்
அதன்படி, இந்தாண்டும், தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி, இம்மாதம், 28, 29, 30 ஆகிய மூன்று நாட்களும், சென்னை கலைவாணர் அரங்கில், கல்வி கண்காட்சியுடன், கருத்தரங்குகளும் நடக்கின்றன.
இந்நிகழ்ச்சிகள் காலை, 10:30 முதல் மாலை, 6:30 மணி வரை நடக்கும். மூன்று நாட்கள் நடக்கும் சிறப்பு கருத்தரங்குகளில், நீட் மற்றும் ஜெ.இ.இ., நுழைவு தேர்வுகளில் சாதிப்பதற்கான டிப்ஸ், ரோபோட்டிக்ஸ் அண்ட் ஆட்டோமேஷன்.
ஓபன் ஏ.ஐ., குவாண்டம் கம்ப்யூட்டிங், ஐ.ஓ.டி., அதாவது, இன்டர்நெட் ஆப் திங்ஸ் கம்ப்யூட்டிங், கடல்சார் படிப்புகள், மெட்டாவர்ஸ், சி.எஸ்., ஐ.டி., டேட்டா சயின்ஸ், பிக்டேட்டா, மிஷின் லேர்னிங் படிப்புகள் குறித்தும், கலை அறிவியல் மாணவர்கள் வளர்த்து கொள்ள வேண்டிய திறன்கள்.
மருத்துவம், துணை மருத்துவ படிப்புகளும், வாய்ப்புகளும், சட்டம், சி.ஏ., படிப்பதால் என்னென்ன வாய்ப்புகள் கிடைக்கும் என்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்படும்.
மேலும், தேசிய அளவிலான நுழைவு தேர்வுகள் விபரம், பிரத்யேக கல்வி நிறுவனங்கள் உட்பட ஏராளமான கல்வி பிரிவுகள், படித்த பின் ஏற்படும் வாய்ப்புகள் குறித்து, 20க்கும் மேற்பட்ட நிபுணர்கள், கல்வியாளர்கள் நேரடி ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில், தமிழகத்தில் உள்ள முன்னணி கல்லுாரிகள், பல்கலைகள், கல்வி நிறுவனங்கள் என, 80க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களின் அரங்குகள் இடம் பெறுகின்றன. ஒவ்வொரு நிறுவனத்திலும் நடத்தப்படும் பாடப்பிரிவுகள், அவற்றுக்கான வேலைவாய்ப்பு குறித்து, அங்கேயே கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
கல்லுாரிகளுக்கான விண்ணப்பம் முதல் மாணவர்கள் சேர்க்கை வரையிலான அனைத்து நடைமுறைகளும், கல்வி கட்டணம் எவ்வளவு உள்ளிட்ட அனைத்து தகவல்கள், ஆலோசனைகள் ஒரு கூரையின் கீழ் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, கல்லுாரிகளை தேடி மாணவர்கள், பெற்றோர் அலைவதை தவிர்க்கலாம்.
வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர், இங்கு கொடுக்கப்பட்டு உள்ள, க்யூ.ஆர்.கோடு ஸ்கேன் செய்து அல்லது, 95667 77833 என்ற, வாட்ஸாப் எண்ணுக்கு, RGN என்று டைப் செய்து அனுப்ப வேண்டும். அனுமதி இலவசம்.
இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களான, இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மைய இயக்குநர் ராஜராஜன், 'ஸ்பேஸ் சயின்ஸ்' பற்றி பேச உள்ளார்.
உயர்கல்வி வாய்ப்பு
ராணுவ துறையின் கீழ் செயல்படும் டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானி டில்லிபாபு, 'நீங்களும் விஞ்ஞானி ஆகலாம்' தலைப்பில் பேச உள்ளார்.
மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலர் சுதா ராமன், உயர் கல்வி வாய்ப்புகள் குறித்தும், ஜோஹோ நிறுவனத்தின் மனிதவள பிரிவு தலைவர் சார்லஸ் காட்வின், வேலைவாய்ப்பு திறன்கள் குறித்தும் பேச உள்ளனர்.
இந்நிகழ்ச்சிக்கு, பவர்டு பை பங்களிப்பாளராக கோவை ஸ்ரீ ராமாகிருஷ்ணா எஜுகேஷனல் இன்ஸ்டிடியூஷன்ஸ், அமிர்தா விஸ்வ வித்யா பீடம் செயல்படுகிறது.
மேலும், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி, அமெட் பல்கலை மற்றும் வேல்ஸ் பல்கலை இணைந்து வழங்குகின்றன.