சர்வதேச ஜவுளி மாநாட்டில் நடந்தது என்ன? தொழில்துறையினர் திருதிரு
சர்வதேச ஜவுளி மாநாட்டில் நடந்தது என்ன? தொழில்துறையினர் திருதிரு
UPDATED : பிப் 02, 2026 08:00 PM
ADDED : பிப் 02, 2026 08:02 PM
கோவை:
கோவையில், சர்வதேச ஜவுளித் தொழில் மாநாட்டை பெயரளவுக்கு நடத்தி, தமிழக அரசின் துணி நூல் துறை சொதப்பியதாக தொழில் துறையினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
கொடிசியா வர்த்தக வளாகத்தில் தமிழக அரசின் துணி நூல் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) சார்பில், முதலாவது 'சர்வதேச ஜவுளித் தொழில் மாநாடு 360' கடந்த 29, 30 ஆகிய 2 நாட்கள் நடந்தது. துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்தார். முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார்.
ஜவுளித் துறை கேந்திரமான கரூர், ஈரோடு, திருப்பூர் பகுதிகளை உள்ளடக்கி கோவையில் இம்மாநாடு நடத்தப்பட்டாலும், இதனால் எவ்வித பயனுமில்லை; போதிய திட்டமிடல் இல்லாமல் துணி நூல் துறை சொதப்பிவிட்டதாக, ஜவுளித் துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
பெயர் வெளியிட விரும்பாத ஜவுளித் துறையினர் கூறியதாவது:
சர்வதேச மாநாடு என எதற்காக பெயர் வைத்தார்கள் எனத் தெரியவில்லை. எத்தனை வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்றார்கள் என்பதும் தெரியவில்லை.
இதே கொடிசியா வளாகத்தில் கடந்த அக்.,ல் உலகளாவிய ஸ்டார்ட் அப் மாநாடு நடந்தது. அந்த நிகழ்வில், எந்தெந்த வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. முக்கிய வெளிநாட்டு தொழில்முனைவோர் யார், அவர்களுடன் வர்த்தக வாய்ப்பு, நெட்வொர்க் மீட்டிங், பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்க, தொழில்நுட்ப அமர்வுகள், மாநாட்டுக்கு வெளியேயும் நெட்வொர்க் மீட்டிங் வாய்ப்புகள் என, அசலான 'பி டூ பி' மாநாடாக நடத்தப்பட்டது.
ஆனால் துணி நூல் துறை நடத்திய இந்த மாநாட்டில், என்னென்ன நடக்கிறது என, ஸ்டால் போட்டவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஊடகங்கள் வாயிலாகவும் போதிய தகவல்கள் வெளியிடப்படவில்லை. இதனால், புதிதாக எந்தவொரு ஜவுளித் தொழில்முனைவோரும், மாநாட்டுக்கு வந்து பயனடைய வாய்ப்புக் கிடைக்கவில்லை.
மாநாட்டில் ரூ.1,000 கோடிக்கும் குறைவான முதலீடு தான் ஈர்க்கப்பட்டது. அதுவும் இந்தப் பகுதியைச் சேர்ந்த நிறுவனங்கள் வழக்கமாக விரிவுபடுத்தும் நடவடிக்கையையே ஒப்பந்தமாக போட்டனர். ஸ்டால் அமைப்பதற்கும் பெரிய நிறுவனங்கள் வரவில்லை.
தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஜவுளித் துறையை ஊக்குவிக்கும் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்த்தோம். அரசின் அறிவிப்பும் பெரிதாக இல்லை. துணி நூல் துறை இப்படியொரு மாநாட்டை நடத்தாமலே இருந்திருக்கலாம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

