UPDATED : மார் 14, 2025 12:00 AM
ADDED : மார் 14, 2025 10:39 AM

சென்னை:
கருணாநிதி முதல்வராக இருந்தபோது, 2010ல் பள்ளிக்கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்காக சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, ஆட்சி மாற்றத்தால் பாதிக்கப்பட்ட பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்கள், முதல்வர் ஸ்டாலின் பணி நியமனம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
பள்ளிக் கல்வித் துறையில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களில் ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய சான்றிதழ் சரிபார்ப்பு, 2010 மே மாதம் மூன்று கட்டங்களாக நடந்தது. 12,000 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
கடந்த 2011ல் சட்ட சபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், நியமன பணிகள் நிறுத்தப்பட்டன. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததால் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டனர். 2012ல் தகுதி தேர்வு அறிவிக்கப்பட்டு, 8,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
பணி நியமனம் கிடைக்காத, 5,000 பேர், 12 ஆண்டுகளாக தனியார் பள்ளிகளில் குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கின்றனர். இவர்களுக்கு அரசு நியமனம் எப்போது நடக்கும் என்று, எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.