ஆதி திராவிடர் கல்லுாரி மாணவர் விடுதியை எப்ப திறப்பீங்க: செப்.1ல் அறிவித்து ஒன்றரை மாதமாகுது
ஆதி திராவிடர் கல்லுாரி மாணவர் விடுதியை எப்ப திறப்பீங்க: செப்.1ல் அறிவித்து ஒன்றரை மாதமாகுது
UPDATED : அக் 24, 2025 08:13 AM
ADDED : அக் 24, 2025 08:13 AM
சிவகாசி:
சாட்சியாபுரத்தில் சொந்த கட்டடத்தில் அரசு ஆதிதிராவிடர் பள்ளி மாணவர் விடுதி இயங்கி வந்தது. தற்போது அந்த கட்டடத்தில் கல்லுாரி மாணவியர் விடுதி செயல்படுவதால், மாணவர் விடுதி வாடகை கட்டடத்திற்கு மாற்றப்பட்டது.
அரசு விடுதிகளில் போதிய மாணவர்கள் இல்லை என்ற புகாரின் அடிப்படையில், அதிகாரிகள் ஆய்வு செய்த போது இரவில் மாணவர்கள் தங்குவதில்லை என்பது உறுதியானதை அடுத்து சிவகாசி பள்ளி மாணவர் விடுதி உட்பட மாவட்டத்தில் 35 ஆதிதிராவிடர் நல விடுதிகளை மூடுவதற்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து 2025 - 2026 கல்வியாண்டில் இந்த விடுதிகளில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சிவகாசி அரசு கலை கல்லுாரி மாணவர்கள் விடுதியில் சேர விண்ணப்பித்து உள்ளதால், கல்லுாரி விடுதியாக தரம் உயர்த்த வேண்டும் என ஆதிதிராவிடர் நலத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதை ஏற்று செப். 1ல் பள்ளி மாணவர் விடுதியை தற்காலிகமாக கல்லுாரி மாணவர் விடுதியாக தரம் உயர்த்த உத்தரவிட்ட ஆதிதிராவிடர் நலத்துறை 50 மாணவர்களை சேர்க்க அனுமதி அளித்தது. மேலும் சேர்க்கை இடங்களில் 50 சதவீத இடங்கள் நிரப்பப்பட்டால் மட்டுமே, கல்லுாரி விடுதியாக நிரந்தரமாக தரம் உயர்த்தப்படும், என அறிவிக்கப்பட்டது.
கல்லுாரி மாணவர் விடுதியாக தரம் உயர்த்தப்பட்டதால் சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பயிலும் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு சுற்றுவட்டார பகுதி, தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 35 மாணவர்கள் விடுதியில் சேர விண்ணப்பம் அளித்தனர்.
ஆனால் 45 நாட்களுக்கு மேலாகியும் விடுதி திறக்கப்படாததால் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே கல்லுாரி மாணவர் விடுதியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பாலாஜி கூறுகையில், பள்ளி மாணவர் விடுதி இயங்கிய வாடகை கட்டடம் காலி செய்யப்பட்டு விட்டது. கல்லுாரி விடுதிக்கு புதிதாக வாடகை கட்டடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் புதிய கட்டடத்தில் விடுதி இயங்கும், என்றார்.

