துணைவேந்தர் நியமனத்தில் தாமதம் ஏன்: அமைச்சர் தகவல்
துணைவேந்தர் நியமனத்தில் தாமதம் ஏன்: அமைச்சர் தகவல்
UPDATED : டிச 04, 2024 12:00 AM
ADDED : டிச 04, 2024 04:11 PM

சென்னை:
துணைவேந்தர் நியமனத்தை நாங்கள் தாமதிக்கவில்லை என உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.
தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் சார்பில், கல்லுாரி பேராசிரியர்களுக்கு, விளைவு அடிப்படையிலான கல்வி குறித்த இரண்டு நாள் பயிற்சி பட்டறையை, அமைச்சர் கோவி.செழியன், சென்னை பல்கலையில் நேற்று துவக்கி வைத்தார்.
அவர் பேசியதாவது:
உயர்கல்வித்துறை, அனைவருக்கும் உயர்கல்வி வாய்ப்பை வழங்கும் வகையில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.
முக்கியமாக, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்கள் உயர்கல்வியின் சதவீதத்தை உயர்த்தும் வகையிலும், நான் முதல்வன் திட்டம், உயர் கல்வியின் தரத்தையும், வேலை வாய்ப்பையும் அதிகரிக்கும் வகையிலும் செயல்படுத்தப்படுகின்றன.
நாட்டில் உயர்கல்வி, 28 சதவீதமாக உள்ள நிலையில், தமிழகம் 47 சதவீதத்தை கடந்துள்ளது. நாடு 50 சதவீதம் எட்டும்போது, நாம் 100 சதவீதம் எட்டும் வகையில், இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், அவர் அளித்த பேட்டி:
அரசு கலை, அறிவியல் பல்கலைகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள், 10,000 ரூபாய் சம்பளம் பெற்ற நிலையில், அ.தி.மு.க., ஆட்சி முடியும்போது, 5,000 ரூபாய் உயர்த்தினர். தி.மு.க., ஆட்சி அமைந்ததும், 25,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது.
அவர்களுக்கான ஊதிய பங்காக, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., ஆண்டுக்கு 40 கோடி ரூபாய் வழங்க வேண்டிய நிலையில், 2017 முதல் பணம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. எனினும், மாணவர்களின் நலன் கருதி, 2,000 கவுரவ விரிவுரையாளர்களுக்கு, தமிழக அரசே சம்பளம் வழங்குகிறது.
காலிப் பணியிடங்களில் கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அத்துடன், நிரந்தரப் பேராசிரியர்களை நியமிக்கும் முயற்சியும் நடக்கிறது. கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு, துணைவேந்தர் நியமனத்தில் தற்போது தடங்கல் உள்ளது. இது யாரால், எங்கிருந்து ஏற்பட்டுள்ளது என்பதை நாடறியும்.
துணைவேந்தர் நியமனத்தை நாங்கள் தாமதிக்கவில்லை. மாணவர்களின் நலனுக்காக, ஏற்கனவே உள்ள ஊதிய விகிதம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து, அரசு நல்ல முடிவை எடுக்கும். யு.ஜி.சி., சொல்லும் வரைமுறைகளில் சில மாற்றங்களை செய்து, மாநில அரசுகள், துணைவேந்தர்களை நியமித்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், உயர் கல்வித்துறை செயலர் கோபால், தொழில்நுட்பக் கல்வி இயக்கக கமிஷனர் ஆபிரகாம், மாநில உயர் கல்வி மன்ற துணைத் தலைவர் விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.