தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/செம்மொழி இருக்க மும்மொழி எதற்கு? அமைச்சர் மகேஷ் கேள்வி

செம்மொழி இருக்க மும்மொழி எதற்கு? அமைச்சர் மகேஷ் கேள்வி

செம்மொழி இருக்க மும்மொழி எதற்கு? அமைச்சர் மகேஷ் கேள்வி


UPDATED : ஜூலை 09, 2025 12:00 AM

ADDED : ஜூலை 09, 2025 01:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 09, 2025 12:00 AM ADDED : ஜூலை 09, 2025 01:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
செம்மொழி இருக்க, மும்மொழி எதற்கு? என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் கேள்வி எழுப்பினார்.

சென்னை கோட்டூர்புரம், அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், தனியார் பள்ளி தமிழாசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சியை, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.

அப்போது, அவர் பேசியதாவது:


இது, ஆசிரியர்களுக்கான பயிற்சி என்றால் பொருத்தமாக இருக்காது. இது, நம்மை நாம் புதுப்பித்துக் கொள்வதற்கான வாய்ப்பு அல்லது சுயமதிப்பீடு என்பதே பொருத்தமாக இருக்கும்.

சவால்தான்


தற்போதைய தலைமுறை குழந்தைகள், ஆசிரியர்களிடம் சந்தேகம் கேட்பதற்கு கூச்சப்பட்டு, செயற்கை நுண்ணறிவிடம் கேள்வி கேட்கின்றனர். என்ன தான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், வகுப்பறையில் மாணவர்களின் முன் நின்று, அவர்களின் உணர்வுகளை புரிந்து பாடம் நடத்தும் ஆசிரியர்களின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.

தமிழாசிரியர்களாகிய நீங்கள் தான், தமிழ் மொழியை உயர்த்தி பிடிக்க வேண்டும். தமிழ் மொழியை உயர்த்தி பிடித்தால் தான், நாம் யார், நம் கலாசாரம் என்ன என்பதை, குழந்தைகளால் அறிந்து கொள்ள முடியும்.

தமிழ் மொழி என்பது, இனத்தின் வரலாறு. 5,300 ஆண்டுகளுக்கு முன்னரே, தமிழன் இரும்பை பயன்படுத்தினான் என்பது பெருமை.

ஏற்கனவே, 4,000 ஆண்டுகளுக்கு முன் இரும்பை பயன்படுத்திய நாடே, முன்னோடியாக கூறப்பட்ட நிலையில், புளோரிடாவில் உள்ள ஆய்வகம், நம் மாநிலத்தில் கிடைத்த இரும்பே தொன்மையானது என்று சான்றளித்து உள்ளது.

கீழடி, ஆதிச்சநல்லுார், கொற்கையை பற்றிய பெருமைகளையும், தொன்மைகளையும் நாம் பேசுகிறோம். அதை, மாணவர்களிடம் எடுத்து செல்லும் பணியை, நாம் பெற்றிருக்கிறோம். ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கு, தமிழ் மொழியை கற்பிப்பது கடினமானது. அதை சவாலாக ஏற்று செய்யும் ஆசிரியர்களுக்கு, இந்த பயிற்சி பயனளிக்கும்.

கடமை உண்டு


செம்மொழி இருக்க மும்மொழி எதற்கு என்ற கொள்கையுடன் இருப்பவர்கள் நாங்கள். தமிழ் மொழியின் பெருமையை உயர்த்தி பிடிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும், உங்களுக்கு உள்ளது. தமிழ் நம் அடையாளமாகவும், ஆங்கிலம் நம் வாய்ப்பாகவும் அமைய வேண்டும்.

பயன்பாடு வேறு மொழிகளுக்கு இருக்குமெனில், அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள அனைத்து மொழிகளையுமே விருப்பப்பட்டால் கற்பதற்கு தடையில்லை. ஆனால், கட்டாயப்படுத்தக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

கடினம்
பயிற்சி குறித்து தமிழாசிரியர்கள் கூறியதாவது:

சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட ஆங்கில வழி பள்ளிகளில், மாணவர்களுக்கு தமிழ் கற்பிப்பது மிகவும் கடினமாக உள்ளது. தமிழ் படித்தால் என்ன பயன் என்று கேட்கின்றனர். அவர்களிடம், ஆங்கில மோகம் அதிகம் உள்ளது.பள்ளிகளிலும், தமிழுக்காக குறைந்த பாடவேளைகள் தான் ஒதுக்கப்படுகின்றன. அதனால், அவர்களுக்கு தமிழ் பாடத்தை நடத்துவது கடினமாக உள்ளது.

அவர்களுக்கு கதை வழியாக பாடம் நடத்துவதும் கடினமாக உள்ளது. அந்த அளவுக்கு, தொழில்நுட்பம் மீதான ஆர்வமும், தமிழ் படித்தால் வேலை கிடைக்காது என்ற அவநம்பிக்கையும் உள்ளது. அதனால், தமிழ் இலக்கண, இலக்கியங்களை கற்பிப்பதை எளிமையாக விளக்கும் வகையில், புத்தாக்கப் பயிற்சி அளித்தால் நன்றாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us