அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிகளில் நிரந்தர பணியிடங்கள் ஏற்படுத்தப்படுமா
அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிகளில் நிரந்தர பணியிடங்கள் ஏற்படுத்தப்படுமா
UPDATED : ஜூலை 21, 2026 04:51 PM
ADDED : ஜூலை 21, 2026 04:52 PM
விருதுநகர்:
தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு பள்ளி என இயங்கும்அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிகளில் மாற்றுப்பணி செய்யும் ஆசிரியர்களின் உத்தரவை ரத்து செய்து கலந்தாய்வு நடத்தும் வகையில் நிரந்தர பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என முதுகலை ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மாவட்டத்திற்கு ஒரு அரசு மாதிரி பள்ளி என 38 மாவட்டங்களில் இவைசெயல்படுகின்றன. இங்கு அரசு பள்ளிகளில்நன்கு படிக்கும் மாணவர்களை சேர்த்து படிக்க வைப்பர்.
உண்டு உறைவிட பள்ளி போல் இயங்கும் இங்கு வார்டனும் உண்டு. உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும், வழிகாட்டி புத்தகங்களும் வழங்கப்படும். மேலும், இம்மாணவர்களுக்கு நீட், ஜே.இ.இ., கியூட் தேர்வுகளுக்கான பயிற்சிகளும் வழங்கப்படும்.
இப்பள்ளிகளில் மற்ற பள்ளிகளின் திறன் படைத்த ஆசிரியர்களையும் மாற்றுப்பணிக்கு பள்ளிக் கல்வித்துறை பணியமர்த்துகிறது. இந்த ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.
மாற்றுப்பணி என வந்தவர்களை 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் வைத்திருந்து கலந்தாய்வுக்கு அனுமதிக்காமல் உள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலப் பொதுச் செயலாளர் அன்பழகன் கூறியதாவது:
அரசு மாதிரி பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை கலந்தாய்வில் காட்டினால், அங்கு வர விரும்பும் ஆசிரியர்கள் வருவர்.
நிரந்தர பணியிடங்களை உருவாக்க வேண்டும். மேலும் அனைத்து அரசு பள்ளிகளையும் மாதிரி பள்ளிகள் போல் மாற்ற வேண்டும். அவ்வாறு செய்தால் இன்னும் நிறைய அரசு பள்ளி மாணவ சாதனையாளர்கள் உருவாவர்.
இம்மாதிரி பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்களில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களை நியமிக்கின்றனர். இதை மாற்றி கலந்தாய்வு முறையில் பதவி உயர்வு முறையில் நியமிக்க வேண்டும், என்றார்.
