UPDATED : ஏப் 08, 2024 12:00 AM
ADDED : ஏப் 08, 2024 09:34 AM

திருப்பூர்:
சர்வதேச ஜவுளி கண்காட்சி மற்றும் ஜவுளி தொழில்நுட்ப கண்காட்சிகள் நடத்துவதை ஊக்குவிக்கும் வகையில், திருப்பூரில் வர்த்தக கண்காட்சி மையம் அமைக்கப்பட வேண்டும்'' என்ற தொழில்துறையினரின் நீண்ட காலக் கோரிக்கை செயல்வடிவம் பெற வேண்டும்.
சுதந்திரத்துக்கு முன்பு, கொல்கத்தாவில் இருந்து வந்த நிட்டிங் இயந்திரம்தான், பின்னலாடை தொழிலுக்கானது திருப்பூர், என்று பிள்ளையார் சுழி போடவைத்தது. பின்னலாடை தரமான பருத்தி நுாலில் இருந்து தயாரிக்கப்பட்டதால், சென்ற இடமெல்லாம் வரவேற்பு குவிந்தது.
பின்னல் துணி என்பது, உள்ளாடைகளுக்கு சரியான தேர்வு என்று, அனைவரும் விரும்பினர். பனியன், ஜட்டி என, விதவிதமான உள்ளாடைகள் தயாரிக்கப்பட்டன. தொடர்ந்து, பின்னல் துணியில் இருந்து, நவீன ஆயத்த ஆடைகளும் உற்பத்தி செய்யப்பட்டன. நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும், திருப்பூரில் உற்பத்தியான பின்னலாடைகள் விற்பனைக்கு சென்றன; நாளடைவில், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அதை தொடர்ந்து, பல்லடம் தாலுகாவின் ஒரு கிராமமாக இருந்த திருப்பூர், இன்று மாநகராட்சியாகவும், மாவட்டமாகவும் உயர்ந்துள்ளது. நாட்டின் பின்னலாடை வர்த்தகத்தின் தலைநகர் என்ற அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.
கைகொடுத்த கண்காட்சிகள்
பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில், ஜவுளி கண்காட்சிகள் இன்றியமையாதவை. ஜவுளித்துறையில் அறிமுகம் செய்யும் புதிய இயந்திரங்கள், கருவிகளை, திருப்பூர் தொழில்துறையினர் பயன்படுத்த, தொழில்நுட்ப கண்காட்சிகளும் கை கொடுத்தன.
கடந்த காலங்களில், வெளிநாடுகளில் நடந்த கண்காட்சிகளுக்கு சென்று, பார்த்து, புதிய தொழில்நுட்பத்தில் தயாரான இயந்திரங்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை இருந்தது. ஏற்றுமதியளர்களும், வெளிநாடுகளில் நடந்த கண்காட்சிகளில் பங்கேற்று, புதிய ஆர்டர்களை பெற்றனர்.
அனைவருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்காது என்பதால், வெளிநாட்டு நிறுவனங்களை அழைத்து, திருப்பூரில் கண்காட்சி நடத்தும் முயற்சியை, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மேற்கொண்டது. அதன் பிறகே, வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்று, ஜவுளி கண்காட்சிகள்; ஜவுளி தொழில்நுட்ப கண்காட்சிகள் திருப்பூரில் நடக்க துவங்கின.
பிள்ளையார் சுழி போடுமா?
ஓட்டல்கள், திருமண மண்டபங்களில் தான் கண்காட்சிகள் நடத்தப்பட்டன. பெரிய அளவிலான வர்த்தக கண்காட்சி மையம் திருப்பூரில் அமைய வேண்டும் என்ற கோரிக்கை தலைதுாக்க துவங்கியது. கடந்த 25 ஆண்டுகளாக, இந்தக்கோரிக்கை, இன்றும், கோரிக்கை அளவிலேயே இருக்கிறது.
இனியாவது, முன்னணி தொழில் அமைப்புகள் கூட்டமைப்பை உருவாக்கி, மத்திய, மாநில அரசு பங்களிப்புடன், பிரமாண்டமான வர்த்தக கண்காட்சி வளாகத்தை திருப்பூரில் அமைக்க வேண்டும். புதிதாக அமையும் மத்திய அரசு, அதற்கு 'பிள்ளையார் சுழி' போட வேண்டும்!
கைகொடுக்கும் இந்திய நிட்பேர் வளாகம்
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் இந்திய நிட்பேர் அசோசியேஷன் சார்பில், ஏற்றுமதியாளர்கள் ஜவுளி கண்காட்சி நடத்த வசதியாக, ஐ.கே.எப்., வளாகத்தை அமைத்தனர். திருமுருகன்பூண்டி அடுத்த பழங்கரையில், அமைத்த வளாகம், சர்வதேச ஜவுளி கண்காட்சி நடத்தவும் சரியான வகையில் கைகொடுக்கிறது. இருப்பினும், ஜவுளி தொழில்நுட்ப கண்காட்சிகள் நடத்தவும், பல்வேறு துறையினர் கண்காட்சி மற்றும் பொருட்காட்சி நடத்தவும், வசதியான வர்த்தக கண்காட்சி மையம், திருப்பூர் அருகே அமைய வேண்டும் என்பதே, ஒட்டுமொத்த தொழில்துறையினரின் எதிர்பார்ப்பு.
திருப்பூர் நகரப்பகுதியில் இடம் இல்லை என்று கூறாமல், திருப்பூர் மாநகராட்சியுடன் இணையப்போகும் பகுதிகளை உத்தேசித்து, குறைந்தது 20 ஏக்கர் பரப்பளவில், தொழில்நுட்ப கண்காட்சி மையம் அமைக்கப்பட வேண்டும். குறிப்பாக, திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள மாநகராட்சி எல்லை பகுதியில் உள்ள நிலத்தை வாங்கியாவது, பிரமாண்ட கண்காட்சி வளாகம் அமைக்கப்பட வேண்டும். மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்தி, டில்லியில் அமைந்துள்ள கண்காட்சி வளாகம் போன்ற வர்த்தக மையத்தை அமைக்க முன்வர வேண்டும்!
கண்காட்சி ஏற்பாடு சவால் நிறைந்தது
கிருஷ்ணா, அமைப்பாளர், நிட் ேஷா கண்காட்சி:தரிசு நிலத்தை தேர்வு செய்து, முழுமையான தற்காலிக கண்காட்சி வளாகம் அமைப்பது, மிகவும் சவாலாக இருக்கிறது. தமிழகத்தில், சென்னை, கோவையை தவிர வேறு பகுதியில், வர்த்தக கண்காட்சி மையம் இல்லை; திருப்பூரில் கட்டாயம் அமைக்க வேண்டும். தற்காலிக கண்காட்சி மையம் அமைக்கும் போது, மின் இணைப்பு இருக்காது; ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்துகிறோம். பார்க்கிங் வசதி, ஏசி வசதி செய்வதும் சவாலாக இருக்கிறது.
கண்காட்சிக்கு, இரண்டு மாதம் முன்பிருந்தே, பணியை துவக்க வேண்டும்; கண்காட்சி முடிந்த பிறகு, ஒரு மாதம் வரை வேலை செய்தால்தான், நிலத்தை சுத்தம் செய்து கொடுக்க முடியும்.வரும், ஆக., 9 முதல்,11 வரை, நிட்ேஷா கண்காட்சி நடக்கப்போகிறது; தற்போதே அதற்கான ஆயத்த பணிகளை துவக்கியுள்ளோம்.
திருப்பூரில், குறைந்தது, 20 ஏக்கரில், பார்க்கிங் வசதியுடன் கண்காட்சி மையம் அமைக்க வேண்டும். பிரத்யேக கண்காட்சி மையம் அமைவது, திருப்பூர் பின்னலாடைத் தொழிலுக்கு, 100 சதவீதம் நன்மையை உருவாக்கும்.
ராயப்பன், தலைவர், ைஹடெக் இன்டர்நேஷனல்:
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, நிட்-டெக் கண்காட்சி நடத்தப்படுகிறது. திருமுருகன்பூண்டி அருகே, காலியிடத்தில், ெஷட் அமைத்து, முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் கண்காட்சி நடத்துகிறோம். வெளிநாட்டினர் வருவதால், கட்டாயம் ஏசி இருக்க வேண்டும். மிகுந்த சிரமம் ஏற்படுவதால், திருப்பூரில் நிரந்தரமான வர்த்தக கண்காட்சி மையம், அனைத்து வசதிகளுடன் அமைய வேண்டும். திருப்பூர் தொழில்துறையினரும் நீண்ட நாட்களாக இக்கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.
ரத்தினசாமி, தலைவர், திருப்பூர் பின்னல் துணி உற்பத்தியாளர் சங்கம்(நிட்மா) :
திருப்பூர் பின்னலாடை தொழிலின் எதிர்கால வளர்ச்சிக்காக, பல்வேறு கோரிக்கையை முன்வைக்கிறோம். ஒட்டுமொத்த திருப்பூரின் நீண்ட நாள் கோரிக்கையே, திருப்பூரில் வர்த்தக கண்காட்சி வளாகம் நிரந்தரமாக அமைய வேண்டும் என்பதுதான். மத்திய அரசு, இனியாவது கண்காட்சி வளாகம் அமைக்க, சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தற்போதைய எம்.பி., வேட்பாளர்களிடமும் இதுதொடர்பாக கோரிக்கை விடுத்துள்ளோம்.