நெய்தல் நிகழ்ச்சியில் பாடுவீங்களா?: மாணவியிடம் கேட்ட கனிமொழி
நெய்தல் நிகழ்ச்சியில் பாடுவீங்களா?: மாணவியிடம் கேட்ட கனிமொழி
UPDATED : அக் 04, 2024 12:00 AM
ADDED : அக் 04, 2024 10:23 AM

துாத்துக்குடி:
துாத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில், அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயரக் கொடிக் கம்பத்தில் கனிமொழி எம்.பி., நேற்று தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
வெள்ள பாதிப்பின் போது சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்களுக்குப் அவர் பரிசுகள் மற்றும் விருதுகளை வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில், சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர் மூன்று பேர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். அவர்களில், பிளஸ் 2 மாணவி ஸ்ரீஹரினியின் குரல் இனிமையாக இருப்பதாகக் கூறி அவரை மேடைக்கு அழைத்த கனிமொழி எம்.பி., கைகுலுக்கி பாராட்டினார்.
துாத்துக்குடியில் புத்தகக் கண்காட்சி மற்றும் நெய்தல் விழாவில் பாடுறீங்களா என மாணவி ஸ்ரீஹரினியிடம் கனிமொழி எம்.பி., வாஞ்சையோடு கேட்டார். சிரித்தபடியே தலையசைத்து ஓகே சொன்னார்.
அவரின் தொடர்பு எண்ணை பெற்றுக் கொள்ளுமாறு தன் உதவியாளரிடம் கூறினார். கனிமொழி எம்.பி.,யின் பாராட்டு தனக்கு மகிழ்ச்சியாக இருந்ததாக மாணவி ஸ்ரீஹரினி தெரிவித்தார்.