UPDATED : மே 20, 2025 12:00 AM
ADDED : மே 20, 2025 10:44 AM

உடுமலை:
உடுமலை சுற்றுப்பகுதி அரசு நடுநிலைப்பள்ளிகளில், உயர்தர ஆய்வகங்கள் அமைப்பதற்கான பணிகள் விடுமுறையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அரசு துவக்கப்பள்ளிகளில், மாணவர்களுக்கான ஸ்மார்ட் வகுப்புகளும், நடுநிலைப்பள்ளிகளில் உயர்தர ஆய்வகங்கள் அமைப்பதற்கு, கடந்த 2022-23 கல்வியாண்டின் விடுமுறையில் பணிகள் துவக்கப்பட்டது.
கடந்த கல்வியாண்டில், ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் ஆய்வகங்கள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்ப்பட்டது. ஆனால், அதற்கான பணிகள் நிறைவு பெறவில்லை.
இணையதள இணைப்பு, ஸ்மார்ட் வகுப்பறைக்கான வண்ண அறைகள் உள்ளிட்ட அடிப்படை பணிகள் நிறைவு பெற்றது. தொழில்நுட்ப கட்டமைப்புகளுக்கு தாமதம் ஏற்பட்டது.
ஆனால், புதிய கல்வியாண்டில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வருவதற்கு, பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
உடுமலை சுற்றுப்பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளிகளில், உயர்தர ஆய்வகங்கள் அமைப்பதற்கு கம்ப்யூட்டர் மற்றும் இதர தொழில்நுட்ப பொருட்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அடுத்தகட்டமாக, தொழில்நுட்ப குழுவினர் பொருட்களை அமைப்பதற்கு வருவதற்கும், பள்ளி நிர்வாகத்தினர் தயாராக இருப்பதற்கும், கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளனர்.