புதுச்சேரியில் உலக தமிழ் மாநாடு: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரியில் உலக தமிழ் மாநாடு: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
UPDATED : ஆக 16, 2024 12:00 AM
ADDED : ஆக 16, 2024 08:16 AM
புதுச்சேரி:
புதுச்சேரியில் பிரமாண்டமாக உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படும், என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
புதுச்சேரி கடற்கரை சாலையில் நடந்த 78வது சுதந்திர தின விழாவில் முதல்வர் ரங்கசாமி தேசிய கொடியேற்றி ஆற்றிய உரை:
ஆன்மிகமும், அழகும் கொண்ட புதுச்சேரி மாநிலம், பெயருக்கு ஏற்ப பல புதுமைகள் கொண்ட மாநிலம். கல்வி, சுகாதாரம், நலத்திட்ட உதவிகள் போன்றவற்றில் புதுச்சேரி பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
பிரதமர் மோடி ஆசியோடு, என் அரசு எடுத்த பல்வேறு வளர்ச்சிப் பணிகளின் விளைவாக புதுச்சேரி தனி நபர் வருமானம், 2 லட்சத்து 63,068 ரூபாயாக உயர்ந்துஉள்ளது. மீனவர்களின் கோரிக்கையை ஏற்று தற்போது வழங்கப்பட்டு வரும் மீன்பிடி தடைக்கால நிவாரணம், 6,500ல் இருந்து 8,000 ஆகவும், மழைக்கால நிவாரணம் 3,000ல் இருந்து 6,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்பட உள்ளது.
வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்திர நிதி உதவி 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தின் கீழ் 36,000 குடும்பத் தலைவிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பிரம்மாண்டமாக உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படும். இதற்கான நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்திய தொல்லியல் துறை உதவியுடன், புதுச்சேரி அரிக்கமேட்டில் ரோமன் சரக்கு கப்பல் மாதிரி வடிவில் விளக்க வழிகாட்டி மையம் அமைக்கப்படும்.
புதுச்சேரியில் மத்திய அரசின் டிஜிட்டல் ட்ரோன் சர்வே நடத்தப்பட்டு, அனைத்து நிலப்பகுதிகளுக்கும் தனித்துவமான நிலப்பகுதி அடையாள எண் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.