கவலையளிக்கும் தேர்ச்சி விகிதம்...மாநகராட்சி பள்ளிகள் மீது கூடுதல் கவனம் அவசியம்!
கவலையளிக்கும் தேர்ச்சி விகிதம்...மாநகராட்சி பள்ளிகள் மீது கூடுதல் கவனம் அவசியம்!
UPDATED : மே 13, 2024 12:00 AM
ADDED : மே 13, 2024 09:44 AM

திருப்பூர்:
தொழிலாளர்களின் குழந்தைகள் அதிகம் படிக்கும் மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் குறைவதால், மாவட்டத்தின் ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதமுத்தில் எதிரொலிக்கிறது. மாநகராட்சி பள்ளிகள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
வெளியான பத்தாம் வகுப்பு பொது தேர்வில், மாவட்ட அளவில் திருப்பூர் மாவட்டம், 21வது இடத்துக்கு தள்ளப்பட்டது. பிளஸ் 2 தேர்வில், மாநில அளவில் முதலிடம் பெற்ற திருப்பூர், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கான காரணத்தை கல்வித்துறையினர் அலசி ஆராய்ந்து வரும் நிலையில், அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் சரிந்துள்ளதும், தேர்ச்சி விகிதம் குறைய முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.
திருப்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளிகளை பொறுத்தவரை, மாணவர் எண்ணிக்கை அதிகம் தான். ஜெய்வாபாய், நஞ்சப்பா பள்ளிகளில், ஆயிரக்கணக்கில் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். மாணவ, மாணவியரை கல்வியில் கரை சேர்க்க, ஆசிரியர்கள் நிறைய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது.
தலைக்குனிவு தந்த ரிசல்ட்
உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, பிற மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து இடம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் பிள்ளைகள் அதிகம் படிக்கின்றனர். 80 சதவீதம் பெற்றோரில் கணவன், மனைவி என, இருவரும் வேலைக்கு செல்லும் நிலையில் மாணவர்களின் கல்வி சார்ந்த விஷயங்களில் அவர்கள் அக்கறை காட்டுவதில்லை என்கின்றனர், ஆசிரியர்கள்.
இதனால், கற்றலில் ஆர்வம் குறைவாக உள்ள மாணவர்களை கரைசேர்ப்பது என்பது, ஆசிரியர்களுக்கு கடினமான செயலாக இருக்கிறது. அதே நேரம், மாநகராட்சி பள்ளிகளின் வளர்ச்சி, கல்வித்தரம் சார்ந்த விஷயங்களில் மாநகராட்சி நிர்வாகமும் கவனம் செலுத்த வேண்டியது, அவசியமாகியிருக்கிறது. பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொது தேர்வுகளில், ஒரு மாநகராட்சி பள்ளிக்கூட, சென்டம் பெறவில்லை என்பது, கல்வித்துறைக்கு மட்டும் சங்கடமான விஷயமல்ல; மாநகராட்சி நிர்வாகத்துக்கும் தலைக்குனிவை தரும் விஷயம் தான்.
தனிக்கவனம் மிக அவசியம்!
இது குறித்து, மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி கூறியதாவது:
மாநகராட்சிகளின் கட்டமைப்பு, பராமரிப்பு உள்ளிட்ட விஷயங்களை கவனிக்க சில கவுன்சிலர்களை உறுப்பினர்களாக உள்ளடக்கிய, கல்வி நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இக்குழு செயல்படுவதாக தெரியவில்லை. மாநகராட்சி பள்ளிகளை பொறுத்தவரை, மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள், கழிப்பறை, குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
கழிப்பறை சுத்தம் செய்யும் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள பணியாளருக்கு வழங்கப்படும் சம்பளம், மிகக்குறைவு என்பதால், அவர்கள் பணியில் முழு கவனம் செலுத்துவதில்லை. பழுதான கட்டடங்களை புதுப்பித்து கொடுக்க வேண்டும். தேவைக்கேற்ப புதிய கட்டடங்களை கட்டித்தர வேண்டும்.
இத்தகைய பணிகளை நன்கொடையாளர்கள் வாயிலாக மேற்கொள்ள, அறிவுறுத்தப்படுகிறது. அனைத்து பள்ளிகளுக்கும் நன்கொடையாளர்கள் கிடைப்பது அரிது. எனவே, மாநகராட்சி பள்ளிகள் பராமரிப்பு, மேம்பாடுக்கான பிரத்யேகமாக நிதி ஒதுக்க வேண்டும்; தேவைக்கேற்ப நிதி ஒதுக்கீடை அதிகரிக்க வேண்டும்.
அதே நேரம், பெற்றோரின் ஒத்துழைப்பு இல்லை என்பதும், தேர்ச்சி விகிதம் குறைய ஒரு காரணம் தான். பி.டி.ஏ., கல்விக்குழு உள்ளிட்ட கூட்டங்களை கூட்டும் போது, 20 சதவீதம் அளவுக்கு தான் பெற்றோர் வருகின்றனர். மாணவர் நலனில் பெற்றோரும் கவனம் செலுத்துவதற்குரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
பணிகள் நடக்கிறது!
மாநகராட்சி கல்விக்குழு தலைவர் திவாகரன் கூறுகையில், கடந்த, 2 ஆண்டுகளில், மாநகராட்சி பள்ளிகளில், 250 புதிய வகுப்பறைகள் கட்டிக் கொடுத்துள்ளோம். கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதுஎன்றார்.