UPDATED : ஜூலை 09, 2026 05:41 PM
ADDED : ஜூலை 09, 2026 05:42 PM
திண்டுக்கல்:
“ஆதிதிராவிடர், பழங்குடியின சமூகத்தை சேர்ந்த எழுத்தாளர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்” என கலெக்டர் துர்கா அறிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
ஆதிதிராவிடர், பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டு சங்கத்தின் மூலம் ஆண்டுதோறும் சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த இலக்கிய படைப்புகளில் 11 படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றை வெளியிட உதவித்தொகை வழங்கப்படும்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த 9 எழுத்தாளர்கள், அச்சமூக பிரச்னைகள் பற்றி எழுதும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் அல்லாத ஒரு எழுத்தாளரின் சிறந்த இலக்கிய படைப்பை கவுரவிக்கும் வகையில் வெளியிட தலா ரூ.1 லட்சம் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்படும்.
எழுத்தாளர்களுக்கு வயது வரம்பு இல்லை. கதை, கட்டுரை, கவிதை, வரலாறு, புதினம் என எந்த படைப்பாகவும் இருக்கலாம். தமிழ் மொழியிலேயே படைப்பு இருக்க வேண்டும். பிற மொழியில் இருந்து மொழி பெயர்க்கப்பட்ட சிறந்த தமிழ் மொழி படைப்பாகவும் இருக்கலாம். ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு அவை அரிதான சிறப்புடையதாக இருப்பது அவசியம். படைப்புகளின் தேர்வில் அரசால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் முடிவே இறுதியானது.
விண்ணப்பங்களை ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்திலும், சென்னை ஆதிதிராவிடர் நல இயக்குநர் அலுவலகத்திலும் வேலை நாட்களில் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க 2026 ஆக., 20 இறுதி நாளாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
