பின்தங்கிய கிராமங்களில் முன்னேறும் இளைஞர்கள்; போட்டித்தேர்வு மையம் கைகொடுக்கும்
பின்தங்கிய கிராமங்களில் முன்னேறும் இளைஞர்கள்; போட்டித்தேர்வு மையம் கைகொடுக்கும்
UPDATED : ஏப் 10, 2025 12:00 AM
ADDED : ஏப் 10, 2025 08:50 AM
 திருப்பூர்: 
பின்தங்கிய கிராமம் என அடையாளம் காணப்பட்டுள்ள குண்டடம் பகுதியில், மாவட்ட நிர்வாகம் சார்பில் துவக்கப்பட்ட போட்டி தேர்வுக்கான பயிற்சி மையத்தில், 40 பேர் இணைந்து பயின்று வருகின்றனர்.
மாவட்ட வாரியாக கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, தொழில் உள்ளிட்டவற்றில் வளர்ச்சி பெறாத கிராமங்கள், பின்தங்கிய கிராமங்களாக தேர்வு செய்யப்பட்டு, அக்கிராமம் மற்றும் கிராம மக்களின் முன்னேற்றத்துக்கு துணை புரியும் வகையில், வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், குண்டடம் வட்டாரம் இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக, குண்டடம் பி.டி.ஓ., அலுவலகத்தில், அரசுப்பணிக்கான போட்டி தேர்வெழுத விரும்புவோருக்கான இலவச பயிற்சி மையம் திறக்கப்பட்டுள்ளது. கடந்த, 3ம் தேதி திறக்கப்பட்ட இம்மையத்தில், தற்போது, 40 பேர் வரை இணைந்து, அரசுப்பணிக்கான போட்டி தேர்வுக்கு தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின், 2025ம் ஆண்டிற்கான தேர்வு அட்டவணைப்படி, குரூப் 4க்கான, வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கான தேர்வு அறிவிப்பு இம்மாதம் வெளியிடப்பட உள்ளது.
அதற்கேற்ப இப்பயிற்சி மையத்தில் பயிற்சி வழங்கப்படுகிறது. வேலை வாய்ப்புத்துறை கோவை மண்டல இணை இயக்குனர் ஜோதிமணி பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார்.'வாரந்தோறும் வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில், காலை, 10:30 முதல், மாலை, 3:30 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. மாதம் இருமுறை, மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
இப்பயிற்சி மையத்தில் திறன்மிகு ஆசிரியர்கள், ஸ்மார்ட் போர்டு வசதியுடன் கூடிய வகுப்பறைகள், தேர்வுக்கு தேவையான புத்தகங்களுடன் கூடிய நுாலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன' என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

