வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1.8 லட்சம் பேர் விண்ணப்பம்; தேர்தல் கமிஷன் தகவல்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1.8 லட்சம் பேர் விண்ணப்பம்; தேர்தல் கமிஷன் தகவல்
ADDED : டிச 26, 2025 06:50 PM

சென்னை: தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும் எனக்கூறி ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 111 பேர் விண்ணப்பம் கொடுத்துள்ளனர்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி கடந்த அக்., 27ல் துவங்கியது. முதல் கட்டமாக, வீடு வீடாக எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் வழங்கப்பட்டு, வாக்காளர்கள் கணக்கெடுக்கப்பட்டனர். எஸ்.ஐ.ஆர்., கணக்கெடுப்புக்கு பின், தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிசம்பர் 19ம் தேதி வெளியிடப்பட்டது. 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், பெயர் சேர்ப்புக்கு படிவம் 6ஐ பூர்த்தி செய்து, ஓட்டுச்சாவடி அலுவலரிடம் வழங்கலாம். பெயர் சேர்ப்புக்கு ஆட்சேபனை தெரிவிப்போர், படிவம் 7, முகவரி மாற்றத்துக்கு படிவம் 8 ஆகியவற்றை வரும் ஜனவரி 18ம் தேதிக்குள் வழங்கலாம் எனவும் தேர்தல் கமிஷன் கூறியிருந்தது.
இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, இதுவரை 6 மற்றும 6 ஏ படிவங்களை நிரப்பி ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 111 பேர் மனு கொடுத்துள்ளனர் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
அதேபோல், 'பெயரை நீக்கக் கோரி 1,708 பேர் மனு கொடுத்துள்ளனர். உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, பெயரை சேர்க்க கோரி விண்ணப்பம் கொடுத்தவர்களின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்படும்', என தமிழக தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளது.

