ரஷ்ய ராணுவத்தில் சிக்கியுள்ள இந்தியர்கள் உக்ரைன் போரில் 26 பேர் பலி; 7 பேர் மாயம்: மத்திய அரசு
ரஷ்ய ராணுவத்தில் சிக்கியுள்ள இந்தியர்கள் உக்ரைன் போரில் 26 பேர் பலி; 7 பேர் மாயம்: மத்திய அரசு
UPDATED : டிச 23, 2025 01:26 AM
ADDED : டிச 23, 2025 01:24 AM

-- நமது நிருபர் -
உக்ரைன் -- ரஷ்யா இடையே நடந்து வரும் போரில், ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட, 202 இந்தியர்களில் 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஏழு பேர் காணாமல் போனதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே, 2022 முதல் போர் நடைபெற்று வருகிறது.
இதை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன.
குற்றச்சாட்டு
ஆனால், உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடர்ந்து வருகிறது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின், மிக மோசமான மற்றும் நீண்டகால போராக இது கருதப்படுகிறது. அதே சமயம் போர் துவங்கியதில் இருந்து இந்தியர்கள் உட்பட ஏராளமான வெளிநாட்டினரை ரஷ்யா தன் ராணுவத்தில் சேர்த்து போரிட வைப்பதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இது தொடர்பாக, நம் நாட்டின் பார்லிமென்டில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, பா.ஜ.,வைச் சேர்ந்த வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் அளித்த பதில்:
ரஷ்ய ராணுவத்தில் இதுவ ரை 202 இந்தியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 26 பேர் உயிரிழந்துள்ளனர், ஏழு பேர் நிலைமை தெரியவில்லை. இதுவரை 119 பேர் விடுவிக்கப்பட்டு நாடு திரும்பியுள்ளனர். இன்னும், 50 பேர் அங்கு சிக்கியுள்ளனர்.

உயிரிழந்த 26 பேரில் 10 பேரின் உடல்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன; இரண்டு பேருக்கு ரஷ்யாவிலேயே இறுதிச் சடங்கு செய்யப்பட்டது.
இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் அடையாளத்தை உறுதி செய்ய குடும்ப உறுப்பினர்களின் டி.என்.ஏ., மாதிரிகள் ரஷ்ய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
முயற்சி
ரஷ்ய தரப்புடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறோம். மீதமுள்ள இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் விடு தலையை உறுதிசெய்ய முயற்சிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
ரஷ்யாவில் வேலை அல்லது படிப்பு வாய்ப்புகள் என்று ஏஜன்டுகளால் ஏமாற்றப்பட்டு, மாணவர், சுற்றுலா விசாவில் பல இளைஞர்கள் ரஷ்யா அழைத்துச் செல்லப்படுகின் றனர். அவர்கள் கட்டாயப்படுத்தி ராணுவத்தில் சேர்க்கப்படுவதை, தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத் துள்ளது.

