ஹரியானாவில் 2,900 கிலோ வெடிமருந்து பறிமுதல்: பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு
ஹரியானாவில் 2,900 கிலோ வெடிமருந்து பறிமுதல்: பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு
UPDATED : நவ 10, 2025 05:55 PM
ADDED : நவ 10, 2025 11:49 AM

பரிதாபாத்: ஹரியானாவில் நேற்று 360 கிலோ வெடி மருந்து மற்றும் துப்பாக்கியை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இன்று அதே பகுதியில் 2,563 கிலோ வெடிமருந்தை ஜம்மு காஷ்மீர் போலீசார் பறிமுதல் செய்தனர். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய காஷ்மீர் டாக்டர்கள் இருவர் உட்பட 7 பேர் கைதான நிலையில், பயங்கர சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.
ஆப்பரேஷன் சிந்தூர் தாக்குதல் சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.
இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத தடுப்பு செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து வேட்டையாடும் பணியில் இந்திய ராணுவத்தினரும், பயங்கரவாத தடுப்பு படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, கடந்த அக்.,27ம் தேதி ஸ்ரீநகரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில், கடந்த வாரம் உத்தரபிரதேசத்தின் சாஹாரன்பூரில் அடில் அகமது ராதர் என்பவன் கைது செய்யப்பட்டான். இவன், ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் டாக்டராக பணியாற்றி வந்துள்ளான்.
அவன் பணியாற்றிய இடத்தில் சோதனை செய்த போது, துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் கண்டெடுக்கப்பட்டன. தொடர்ந்து, அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஜம்மு காஷ்மீர் போலீசாருக்கு திடுக்கிடும் தகவல் வெளியாகின.
அந்த தகவலின் பேரில், ஹரியானாவின் பரிதாபாத்தில் உள்ள மற்றொரு டாக்டரான முஜாமில் ஷகீல் என்பவன் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது, 360 கிலோ வெடிமருந்துகள், டைமர்கள் மற்றும் துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் ஷகீல் டாக்டராக வேலை செய்து வந்துள்ளான். இதையடுத்து, முஜாமில் ஷகீலை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர்.
மற்றொரு வீட்டில்
இன்று அந்த பகுதியில் ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநில போலீசார் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதில், மற்றொரு வீட்டில் 2,563 கிலோ வெடிமருந்துகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது அமோனியம் நைட்ரேட் ஆக இருக்கும் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம், பயங்கரவாத தாக்குதல் நடத்தும் சதித்திட்டம் அம்பலமாகியுள்ளது. கைதான நபர்களின் பின்னணி, அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் விளக்கம்
சோதனை குறித்து ஜம்மு காஷ்மீர் போலீசார் வெளியிட்ட அறிக்கை;
ஸ்ரீநகர், அனந்த்நாக், கந்தர்பால் மற்றும் ஷோபியான் ஆகிய பகுதிகளில் பயங்கரவாத தடுப்பு சோதனை நடத்தப்பட்டது. உத்தபிரதேசத்தின் ஷஹாரன்பூரிலும், ஹரியானாவின் பரிதாபாத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின் போது, ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் அன்சார் கஜ்வாத்-உல்-ஹிந்த் என்ற உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் உள்ளிட்ட பிற நாடுகளில் உள்ள பயங்கரவாத குழுக்களிடம் இருந்து உத்தரவுகளைப் பெற்று, மாணவர்கள் உள்ளிட்டோரை பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்தும் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இந்த சோதனையின் போது, அரிப் நிசார் தார், யசிர் உல் அஷ்ரப், மக்சூத் அகமது தார், மோல்வி இர்பான் அகமது, ஜமீர் அகமது அஹாங்கர், முஷாமில் அகமது கனாய், அடில் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், முக்கிய ஆவணங்கள், எலக்டிரானிக் கருவிகள், ரஷ்யா மற்றும் சீனா நாடுகளில் தயாரிக்கப்பட்ட நவீன உயர்ரக துப்பாக்கிகள், வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 2,900 கிலோ எடையுள்ள மூலப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி பரிமாற்றம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

