ADDED : ஜூன் 08, 2026 04:49 AM

சென்னை: திருச்சி கிழக்கு உட்பட ஐந்து சட்டசபை தொகுதிகளில், இடைத்தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளில், தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., சார்பில், மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்ட மரகதம் குமரவேல்; பெருந்துறையில் போட்டியிட்ட ஜெயகுமார்; தாராபுரத்தில் களமிறங்கிய சத்யபாமா; அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்ட இசக்கி சுப்பையா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இவர்கள் பதவியேற்பு முடிந்த பின், தங்களின் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து, விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தனர்.
இதனால், நான்கு சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ததால், அந்த தொகுதியும் காலியாக உள்ளது.
காலியாக உள்ள இந்த ஐந்து சட்டசபை தொகுதிகளுக்கும், ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும். எனவே, அதற்கான முன்னேற்பாடுகளை, தேர்தல் கமிஷன் தொடங்கி உள்ளது.
இதுதொடர்பாக, டில்லியில் உள்ள தேர்தல் கமிஷனர்களுடன் ஆலோசனை நடத்த, இந்த வாரம் தமிழக தேர்தல் அதிகாரிகள், டில்லி செல்ல உள்ளனர். ஜூலையில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என, தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபை தேர்தல் முடிந்து, ஓராண்டுக்குள் ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடப்பது, தமிழகத்தில் இதுவே முதல் முறை என்பதால், அரசியல் வட்டாரம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
சட்டசபையில், தனிப்பெரும்பான்மையை பெற வேண்டும் என்பதால், த.வெ.க., தலைமை, இத்தேர்தலில் வெற்றி பெற இப்போதே வியூகங்களை வகுத்து வருகிறது.
ஐந்து தொகுதிகளிலும், மக்கள் பிரச்னைகளை தீர்க்க முக்கியத்துவம் அளிக்கும்படி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
