UPDATED : ஜூன் 11, 2026 10:35 PM
ADDED : ஜூன் 11, 2026 10:01 PM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை சேர்ந்த, 'ஏ' பிளஸ் ரவுடி தினேஷை, காங்கிரஸ் ஆர்.டி.ஐ., பிரிவு துணை தலைவராக நியமித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரத்தின் பிரபல ரவுடி ஸ்ரீதர், கடந்த 2016ல், கம்போடியாவில் போலீசார் தன்னை கைது செய்ய நெருங்கியதை அறிந்து, தற்கொலை செய்து கொண்டார். ஸ்ரீதர் மறைவுக்குப் பின், அவரிடம் ஓட்டுனராக இருந்த தினேஷ் ஒரு குழுவாகவும், ஸ்ரீதரின் மைத்துனர் தணிகா ஒரு குழுவாகவும் செயல்பட்டனர்.
இரு பிரிவும் அடிக்கடி மோதியதால், கொலை சம்பவங்கள் நடந்தன. ரவுடி தினேஷ் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், பணம் பறித்தல் என, 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. காஞ்சிபுரத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும், 'ஏ' பிளஸ் ரவுடியாகவும் உள்ள தினேஷை போலீசார் கைது செய்து, கோவை, சேலம் உள்ளிட்ட சிறைகளிலும் அடைத்தனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஆர்.டி.ஐ., பிரிவின் மாநில துணை தலைவராக தினேஷ் நியமிக்கப்பட்டு உள்ளார். தனக்கு பதவி அளித்ததற்காக, காங்கிரஸ் மாநில ஆர்.டி.ஐ., பிரிவு தலைவர் கனகராஜூக்கு நன்றி தெரிவித்து, காஞ்சிபுரத்தில் போஸ்டர்களை தினேஷ் ஒட்டியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
