ஆன்லைன் விளையாட்டில் நேர்ந்த விபரீதம்: பாலிவுட் நடிகர் அக்சய் குமார் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்
ஆன்லைன் விளையாட்டில் நேர்ந்த விபரீதம்: பாலிவுட் நடிகர் அக்சய் குமார் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்
ADDED : அக் 03, 2025 08:51 PM

மும்பை: '' தனது மகள் ஆன்லைனில் விளையாடி கொண்டு இருந்த போது, மர்ம நபர் ஒருவர் நிர்வாண புகைப்படத்தை அனுப்புமாறு கேட்டார்,'' என பாலிவுட் நடிகர் அக்சய் குமார் கூறினார்.
இணைய சேவை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் அதிகரித்துள்ள நிலையில், சைபர் கிரைம் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இதில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிலர் தைரியத்துடன் வெளியில் வந்து போலீசில் புகார் அளிப்பதுடன், பேட்டி கொடுக்கின்றனர். சிலர் தயக்கம் காரணமாக வெளியில் சொல்லாமல் மனதில் போட்டு கவலைப்படுகின்றனர்.
இந்நிலையில், மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அக்சய் குமார் பேசியதாவது: கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது வீட்டில் நடந்த சிறிய சம்பவம் ஒன்றை கூற விரும்புகிறேன். எனது மகள் ஆன்லைனில் வீடியோ கேம் விளையாடி கொண்டு இருந்தார். வேறு யாருடனும் விளையாடும் வகையிலான ஆன்லைன் விளையாட்டுகளும் உள்ளன. அடையாளம் தெரியாத நபர்களுடன் தான் விளையாட முடியும். அப்போது அவர்களிடம் இருந்து குறுஞ்செய்தி வரும்.
அப்படி எனது மகளுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், ஒருவர் எனது மகளிடம் நீங்கள் ஆணா அல்லது பெண்ணா என கேட்டுள்ளார். அதற்கு எனது மகள் பெண் என கூறினார். இதனையடுத்து அந்த நபர், நிர்வாண படத்தை அனுப்பும்படி தகவல் அனுப்பினார். இதனையடுத்து மகள் உடனடியாக விளையாட்டை நிறுத்திவிட்டு எனது மனைவியிடம் கூறினார். இதுவும் ஒரு வகையில் சைபர் குற்றம் தான். எனவே, ஒவ்வொரு வாரமும் மாணவர்களுக்கு சைபர் பாதுகாப்பு குறித்து பாடத்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என முதல்வர் பட்னாவிசுக்கு கோரிக்கை வைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.