தமிழகம், மஹாராஷ்டிரா, கேரளா, உபி உள்ளிட்ட மாநிலங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
தமிழகம், மஹாராஷ்டிரா, கேரளா, உபி உள்ளிட்ட மாநிலங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
UPDATED : நவ 10, 2025 10:37 PM
ADDED : நவ 10, 2025 08:30 PM

புதுடில்லி: டில்லியில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம், மஹாராஷ்டிரா, கேரளா, ஒடிசா மற்றும் உ.பி. ஆகிய மாநிலங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளன. அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.
பரிதாபாத்தில் 2,900 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சூழ்நிலையில் டில்லியில் கார் குண்டுவெடித்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்தில் என்ஐஏ அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பயன்படுத்தப்பட்டவை குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து டில்லியில் உஷார்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. பார்லிமென்ட் வளாகம், விமான நிலையம், ரயில் நிலையம், முக்கிய பிரமுகர்கள் தங்கும் இடம் உள்ளிட்டவற்றில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டில்லியைத் தொடர்ந்து மஹாராஷ்டிரா தலைநகர் மும்பை மற்றும் அம்மாநிலத்தில் முக்கிய இடங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரோந்துப் பணியை தீவிரபடுத்தும்படி அனைத்து போலீஸ் ஸ்டேசன்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், வாகன சோதனை மற்றும் சந்தேக நபர்களை விசாரிக்கும்படியும் கூறப்பட்டுள்ளது.
உ.பி., மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கேரளா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்திலும் பாதுகாப்பு அதிகாரிக்கப்பட்டுள்ளது. கோவை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு, ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

