இம்ரான் கான் ஆட்சி கவிழ்ப்பின் பின்னணியில் அமெரிக்கா: வெளியானது ரகசிய ஆவணம்
இம்ரான் கான் ஆட்சி கவிழ்ப்பின் பின்னணியில் அமெரிக்கா: வெளியானது ரகசிய ஆவணம்
ADDED : மே 19, 2026 01:59 AM

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பதவியிழந்ததற்கு வெளிநாட்டு சதிதான் காரணம் என்ற அவரது குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில், ரகசிய துாதரக ஆவணம் ஒன்று வெளியாகி சர்வதேச அரசியலில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
முன்னான் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ - இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கா,.ன் நம் அண்டை நாடான பாகிஸ்தானில் 2018 ஆகஸ்ட் முதல் 2022 ஏப்ரல் வரை பிரதமராக இருந்தார்.
உள்நாட்டு அரசியல் குழப்பங்கள், சர்வதேச வெளியுறவுக் கொள்கைகளில் ஏற்பட்ட முரண்பாடுகள் போன்ற காரணங்களால், அவருக்கு எதிராக 2022ல் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு பதவியில் இருந்து துாக்கப்பட்டார்.
அப்போது இம்ரான் கான் தன் ஆட்சி கவிழ்ப்பிற்கு அமெரிக்காவின் சதிதான் காரணம் என்று குற்றம் சாட்டினார். அதனை உறுதி செய்யும் வகையில், அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பரிமாறிக்கொள்ளப்பட்ட அதிர வைக்கும் ரகசிய துாதரக ஆவணம் தற்போது வெளியாகி உள்ளது.
' டிராப் சைட் நியூஸ்' என்ற புலனாய்வு ஊடகம் இந்த அதிரடி ஆவணத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 2022ல் அமெரிக்காவிற்கான அப்போதைய பாகிஸ்தான் துாதர் ஆசாத் மஜீத் கானுக்கும், அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி டொனால்டு லுா-வுக்கும் இடையே ஒரு ரகசிய சந்திப்பு நடைபெற்றது.
அப்போது இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றால், அனைத்தும் மன்னிக்கப்படும்.
இல்லையெனில், பாகிஸ்தானுக்கு வரும் காலம் மிகவும் கடினமாக இருக்கும் என்று லுா எச்சரித்துள்ளார்.
மேலும், இம்ரான் கான் அரசியல் ரீதியாக தப்பித்து ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடமிருந்து பாகிஸ்தான் முற்றிலுமாக தனிமைப்படுத்தப்படும் என்று அமெரிக்கா எச்சரித்ததாக அந்த ஆவணம் கூறுகிறது.
இம்ரான் கான் அரசுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல விவகாரங்களில் மோதல் வெடித்ததே இந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு அடித்தளமாக அமைந்ததாகவும் டிராப் சைட் நியூஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
