ADDED : ஜூன் 28, 2026 05:24 AM

- நமது சிறப்பு நிருபர் -
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உ.பி.,யில், அடுத்தாண்டு பிப்ரவரியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது.- பா.ஜ., - காங்., - சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் என, அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலைகளில் இறங்கிவிட்டன. 2024 லோக்சபா தேர்தலில், உ.பி.,யில் பா.ஜ., கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால், கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டியதாயிற்று.
எனவே, வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் பா.ஜ., உள்ளது. உ.பி.,யில் முதன்முதலாக யோகி ஆதித்யநாத் முதல்வராக காரணம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. இவர் தான் விடாப்பிடியாக யோகிக்கு ஆதரவளித்தார். ஆனால், பின்னாளில் இவருக்கும், யோகிக்கும் இடையே உறவு கசந்தது. இது தொடர்ந்தால், சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெறுவது கடினம் என்பதை இருவரும் உணர்ந்து, மீண்டும் நெருங்கி வந்துள்ளனர் என்கின்றனர் உ.பி., - பா.ஜ., தலைவர்கள்.
தேசிய தலைவராக நிதின் நபின் பதவியேற்ற பின், சமீபத்தில், உ.பி., - பா.ஜ., அமைப்பு மாற்றி அமைக்கப்பட்டது. யோகிக்கும், அமித் ஷாவிற்கும் நெருக்கமானவர்களுக்கு கட்சியில் முக்கிய பதவிகள் தரப்பட்டுள்ளன. வட மாநிலங்களில் தேர்தல் என்றாலே, அது ஜாதி சம்பந்தப்பட்டது தான். அதுவும் உ.பி.,யில் கேட்கவே வேண்டாம். புதிய நிர்வாகிகள் நியமனத்தில், அனைத்து ஜாதியினரையும் திருப்திப்படுத்தும் வகையில் தான், கட்சி தலைமை செயல்பட்டுள்ளது.
ஜாதி சமநிலையை பாதுகாப்பதற்காக, ராஜ்புத், ஷாக்யா, பிராமணர், பாசி உட்பட எட்டு சமூகத்தைச் சேர்ந்தவர்களை பொதுச்செயலர்களாக பா.ஜ., நியமித்துள்ளது. இதற்கிடையே, அயோத்தி நன்கொடை விவகாரம், பா.ஜ.,வின் வெற்றியை பாதிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
