சிறுபான்மையினர் எரித்துக்கொல்லப்படும் அட்டூழியம்: ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு
சிறுபான்மையினர் எரித்துக்கொல்லப்படும் அட்டூழியம்: ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு
ADDED : டிச 25, 2025 10:32 PM

டாக்கா: '' வங்கதேசத்தில் இடைக்கால அரசு மத சுதந்திரத்தில் தலையிடுவதால் சிறுபான்மையினர் உயிருடன் எரித்துக் கொல்லப்படுகின்றனர்,'' என அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளார்.
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. திபு சந்திர தாஸ் என்ற ஹிந்து இளைஞரை கும்பல் அடித்துக் கொன்றதுடன் அவரது உடலை மரத்தில் கட்டிவைத்தும், நடுரோட்டில் போட்டும் எரித்தனர்.
இந்த சம்பவத்தில் இருந்து அங்கு வசிக்கும் ஹிந்து மக்கள் மீள்வதற்குள், அவர்களின் வீடுகளுக்கு தீவைத்து எரிக்கப்பட்டன. நேற்று நள்ளிரவு மற்றொரு ஹிந்து மத இளைஞர் ஒருவரை கும்பல் ஒன்று அடித்துக் கொலை செய்தனர்.
இந்நிலையில் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது: வங்கதேச நிறுவனர் நாட்டை, மதசார்பற்ற நாடாக இருக்க கனவு கண்டார். இந்த கனவு நிறைவேற, அனைத்து தரப்பு மக்களும் அமைதியாக வாழ்வதை அவாமி லீக் கட்சி உறுதி செய்தது. சட்டவிரோதமாக அதிகாரத்தை கைப்பற்றிய தற்போதைய அரசு, அனைத்து மதங்கள் மற்றும் சமூகங்களைச் சேர்ந்த மக்களின் மத சுதந்திரத்தில் தலையிடுகிறது என்பது வருத்தமளிக்கிறது. இதனால் மதச் சிறுபான்மையினர் உயிருடன் எரிப்பது போன்ற அட்டூழியங்களுக்கும் இது வழிவகுக்கிறது. வங்கதேச மக்கள் இந்த இக்கட்டான நிலை தொடர அனுமதிக்க மாட்டார்கள். சிறுபான்மையின மக்கள் சொல்ல முடியாத துயரத்தில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

