அரிசிக்காக இந்தியாவிடம் அடைக்கலம் தேடும் வங்கதேசம்
அரிசிக்காக இந்தியாவிடம் அடைக்கலம் தேடும் வங்கதேசம்
ADDED : டிச 24, 2025 10:28 PM

டாக்கா : இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவு முகமது யூனுஸ் அரசில் பலவீனமடைந்து வரும் நிலையில், குறைந்த விலை காரணமாக இந்தியாவிடம் இருந்து அரிசி இறக்குமதி செய்ய வங்கதேச அரசு முடிவு செய்துள்ளது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தால் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தது.அவர் பிரதமராக இருந்த வரை இந்தியாவுடன் நல்லுறவை பேணி வந்தார். அவருக்கு பின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் பதவியேற்றார்.
இவர் ஆட்சிக்கு வந்ததில் இருந்து வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல், ஹிந்துக்களின் தொழில்களை குறிவைப்பது உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சமீபத்தில் ஹிந்து இளைஞர் திபு சந்திர தாஸ், 27, முஸ்லிம் மதத்துக்கு எதிராக பிரசாரம் செய்தார் என வதந்தி பரப்பப்பட்டது. இதை நம்பி ஒரு கும்பல் அவரை கொடூரமாக கொலை செய்தது.
இத்தகைய அரசியல் கொந்தளிப்புக்கு இடையே அரிசி இறக்குமதிக்கு இந்தியாவை சார்ந்துள்ளது வங்கதேசம். சமீபத்தில் 50,000 டன் அரிசி இறக்குமதிக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர். மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவிடம் இருந்து இறக்குமதி செய்வதால் வங்கதேசத்துக்கு, 18 கோடி ரூபாய் மிச்சமாகிறது. உணவு பாதுகாப்பு விஷயத்தில் வங்கதேசத்துக்கு இந்தியா எந்த தடையும் விதிக்காமல் அரிசி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

