கோவில் வளாகத்தில் மாட்டிறைச்சி கழிவுகள்: பக்தர்கள் கொந்தளிப்பு
கோவில் வளாகத்தில் மாட்டிறைச்சி கழிவுகள்: பக்தர்கள் கொந்தளிப்பு
UPDATED : ஜூலை 26, 2026 08:44 PM
ADDED : ஜூலை 26, 2026 08:30 PM

சென்னை: திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவில் வளாகத்தில், மனதை புண்படுத்தும்படி மாட்டிறைச்சி கழிவுகள் கொட்டப்படுவது, பக்தர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடும், அதை உண்ண வரும் நாய்களால் பக்தர்களுக்கு ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருப்பாச்சூரில் 1,800 ஆண்டுகள் பழமை வாய்ந்த வாசீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டு தலங்களில் ஒன்றாகும். இங்கு உள்ள வாசீஸ்வரர், சுயம்பு லிங்கமாக எழுந்தருளி, சதுர பீடத்தில் அருள்பாலிக்கும் வரலாற்று சிறப்புமிக்க இக்கோவில், 4 ஏக்கர் பரப்பளவில் கம்பீரமாக அமைந்துள்ளது.
வேதங்களை திருடியதாக கருதப்படும் அசுரர்களை கொன்றதன் மூலம் தனக்கு ஏற்பட்ட பாவத்தை போக்க, மகாவிஷ்ணு இந்த கோவிலில் சிவபெருமானை வழிபட்டதாகவும், அதனால், 'பெருமாள் வினை தீர்த்த ஈஸ்வரர்' என்ற பெயரும் உள்ளது. தினமும் திரளானோர் வந்து, வழிபட்டு செல்கின்றனர்.
இந்நிலையில், கோவில் சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள பகுதியில், மர்ம நபர்கள் தொடர்ச்சியாக மாட்டிறைச்சி கழிவுகளையும், எலும்பு துண்டுகளையும் கொட்டிச் செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்கள், அந்த இறைச்சி கழிவுகளையும், எலும்புகளையும் கவ்விக்கொண்டு, கோவில் வளாகத்திற்குள்ளேயே எடுத்து வந்து சாப்பிடுகின்றன.
இதனால், புனிதமான கோவில் வளாகம் அசுத்தமாவதோடு, இறைவனை தரிசிக்க வரும் பக்தர்கள் அருவருப்பும், மனவேதனையும் அடைகின்றனர். நாய்களால் பக்தர்களுக்கு ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. கோவிலின் தெய்வீகத் தன்மையும், அமைதியும் சீர்குலைவதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுமட்டுமின்றி, இக்கோவிலுக்குச் சொந்தமான 2.15 ஏக்கர் நிலம், கோவிலில் இருந்து 1 கி.மீ., தொலைவில் உள்ளது. பயன்பாடின்றி இருக்கும் இந்நிலத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், அப்பகுதியில் மாட்டிறைச்சி தொழில் செய்து வரும் சிலர், எஞ்சிய கழிவுகளை கோவில் நிலத்தின் சுற்றுச்சுவருக்குள்ளேயே வீசி செல்கின்றனர். இதனால் அந்த இடம் முழுதும் துர்நாற்றம் வீசி, கடும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக சிவபக்தர்களும், அப்பகுதி பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
