விளாத்திகுளம் மாணவி கொலை: சி.பி.ஐ., விசாரணை கோரி வழக்கு
விளாத்திகுளம் மாணவி கொலை: சி.பி.ஐ., விசாரணை கோரி வழக்கு
UPDATED : மார் 14, 2026 04:00 AM
ADDED : மார் 14, 2026 03:02 AM

மதுரை: துாத்துக்குடி மாவட்டம், குளத்துார் அருகே, மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில், சி.பி.ஐ., விசாரணை கோரியதில், 'வழக்கின் ஆவணங்களை அரசு தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியது.
துாத்துக்குடி மாவட்டம், குமாரபுரம் வழக்கறிஞர் மாரீஸ்வரி தாக்கல் செய்த மனு:
குளத்துார் அருகே, ஒரு மாணவி மார்ச் 10ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பினார். அன்று இரவு வெளியில் சென்றவர், வீடு திரும்பவில்லை.
குளத்துார் போலீசில், பெற்றோர் புகாரளித்த போது, விளாத்திகுளம் மகளிர் போலீசில் புகார் அளிக்கும்படி தெரிவித்தனர். அங்கு புகாரளித்தும் நடவடிக்கை இல்லை.
மார்ச் 11ல், அந்த கிராமம் அருகே, முட்புதரில், ஆடைகள் களையப்பட்டு, வெட்டு காயங்களுடன் மர்மமான முறையில் மாணவி இறந்து கிடந்தார்.
'இதை பெரிதுபடுத்த வேண்டாம்' என, பெற்றோரை, அரசியல் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் முன்னிலையில் போலீசார் சமரசம் செய்ய முயன்றுள்ளனர்.
கஞ்சாவிற்கு அடிமையான சிலர், அம்மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்து, கொலை செய்திருக்கக்கூடும்.
இவ்வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
இவ்வழக்கை நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அமர்வு விசாரித்தது. அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல்கான், 'முதலில் சிறுமி மாயமானதாக வழக்கு பதியப்பட்டது. பின், கொலை வழக்காக மாற்றப்பட்டது. விளாத்திகுளம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். பிரேத பரிசோதனை முடிந்துவிட்டது.
'குற்றவாளிகளை கைது செய்ய, 10 தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளன. அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் தேவை' என்றார்.
மனு தாரர் தரப்பு வழக்கறிஞர் மாரீஸ்குமார், 'சம்பவம் நடந்ததும் நடவடிக்கை எடுக்கவில் லை. குற்றவாளிகள் கைதாகவில்லை. விசாரணை சரியாக நடக்கவில்லை' என்றார்.
நீதிபதிகள், 'டி.என்.ஏ., பரிசோதனை, கண்காணிப்பு கேமரா பதிவுகள் அடிப்படையில், குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். வழக்கு ஆவணங்களை மார்ச் 16ல் அரசு தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டனர்.
